Monday 11 February 2013

போப்பாண்டவர் திடீர் ராஜினாமா: 28ம் தேதியுடன் விலகுகிறார்

 
புனித போப்பாண்டவரான பெனடிக்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
16ம் போப்பாண்டவராக பெனடிக்ட் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி இந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 85 வயதான போப் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் 28ம் தேதியுடன் அவர் பதவி விலகிவிடுவார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் பிரடிரிகோ லோம்பார்டி இன்று அறிவித்தார்.
 
 சமீபகாலமாக அவரால் போப்பாண்டவருக்கான பணிகளை மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ரோம் நகரில் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் அவர் கையில் வைத்திருந்த உரையைப் படிக்க முடியாமல் சிரமப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்த மாத இறுதியுடன் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடவுள் முன் என் மனசாட்சியை ஆய்வு வந்த பிறகே நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். முதுமை காரணமாக இனி போப்பாண்டவரின் பணிகளை செம்மையாக நிறைவேற்ற எனது உடல் நிலை இடம் தரவில்லை. இன்றைய உலகில், அவரசமாக மாறுதல்களுக்கு இடையே நற்செய்தியை அறிவிக்கவும் இந்தத் தொண்டை செம்மனே செய்யவும் மனம் மற்றும் உடல் இரண்டின் வலிமையும் மிக அவசியம். 
 
ஆனால், கடந்த சில மாதங்களில் எனது உடல் வலிமை அதிகமாக குன்றிவிட்டது. இதனால் என்னால் இந்தப் பணியை சரியாக செய்ய முடியாது என்பதை உணர்ந்ததால் தான் பதவி விலகுகிறேன் என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் பல நூறு கோடி கத்தோலிக்க கிருஸ்துவர்களின் தலைவரான போப்பாண்டவர் புனித பீட்டரின் வாரிசாகக் கருதப்படுபவர் ஆவார். ரோம் நகரில் உள்ள வாடிகன் நகரில் போப்பாண்டவரின் தலைமையகம் உள்ளது. 
 
பெனடிக்டுக்கு முன் ஜான் பால் 26 ஆண்டுகள் போப்பாண்டவராக இருந்தார். அவரது மரணத்தையடுத்து பொறுப்புக்கு வந்த பெனடிக்ட் 8 ஆண்டுகளிலேயே பதவி விலகுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment