Thursday 21 February 2013

மகனைப் போன்று தேசிய தலைவரும் மிக அருகில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்


 இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்தது. அப்போது சுமார் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் ஈவுஇரக்கமின்றி இலங்கை ராணுவத்தினரால் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தகவலை ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

எனவே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் விரைவில் கூட இருக்கின்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு கண்டன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவம் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றதை இங்கிலாந்தை சேர்ந்த “சேனல்-4” டி.வி. சமீபத்தில் அம்பலப்படுத்தியது. பால்வடியும் முகத்துடன் கூடிய பச்சிளம் பாலகனான பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுவது போன்றும், உடலில் 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கும் போட்டோக்களும் வெளியிடப்பட்டது. ஆனால் போர் நடந்தபோது பாலசந்திரன் கொல்லப்பட்டான் என இலங்கை ராணுவம் தெரிவித்து வந்தது.

தற்போது அவனை ராணுவம் பிடித்து சென்று ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் உலக மக்களை அதிர்ச்சி அலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விடு தலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் போரில் சாகவில்லை. அவரையும் சிங்கள ராணுவம் பிடித்து சிறை வைத்து சித்ரவதை செய்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போரில் இறந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதி மதியம் 1 மணிக்கு முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பிணம் கிடந்ததாகவும், அதை ராணுவம் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்தது. பிரபாகரன் நெற்றியில் குண்டு பாய்ந்து இறந்து கிடக்கும் போட்டோவையும் வெளியிட்டது.

முன்னதாக இரவில் முல்லிவாய்க்கல் பகுதியில் தப்பி ஓட முயன்ற விடுதலைப்புலிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக இலங்கை அரசு அறிவித்து இருந்தது. அப்போது நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் சிலருடன் பிரபாகரனும் இறந்ததாகவும், மறுநாள் உடல் கண்டெடுக்கப் பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

பிரபாகரனின் உடல் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அதில் அவரது உடலை சுற்றி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி நின்றனர். அவரது தலையில் “பேண்டேஜ்” (தலைகட்டு) போடப்பட்டிருந்தது. தலைப் பகுதியில் எலும்புகள் நொறுங்கி இருந்தன. அவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது மிக அருகில் இருந்து கனரக ஆயுதத்தால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவரது கண்கள் திறந்த நிலையில் இருந்தன. அதை வைத்து பார்க்கும் போது அவரை பிடித்து வந்த சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சியில் கண்கள் திறந்தபடியே உயிர் பிரிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

அவரது பிணம் கிடந்த இடத்தில் அதாவது தலையின் அடிப்பாகத்தில் ஏராளமான ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. அக்காட்சி போட்டோவில் தெரிகிறது. ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட 20 நிமிடத்தில் உடலில் இருந்து ரத்தம் வெளிவராது. உறைந்து விடுவதால் அது நின்று விடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் முதல்நாள் இரவில் நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன் உயிரிழந்ததாகவும, மறுநாள் தான் அவரது உடல் கண் டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால் போட்டோவில் தலையின் அடியில் ரத்தம் வெளியாகி கொண்டிருப்பது தெரிகிறது. அதை வைத்து பார்க்கும்போது, நந்திக் கடல் பகுதியில் நடந்த போரில் பிரபாகரன் சாக வில்லை. அப்போது அவர் இறந்திருந்தால் ரத்தம் கடல் நீரில் கரைந்திருக்கும். பிரபாகரனை பிடித்து வந்து ராணுவ முகாமில் வைத்து சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் படம் பிடித்து டி.வி.யில் ஒளிபரப்பு செய்துள்ளனர் என்றும் நிபுணர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

நன்றி: மாலைமலர் 

No comments:

Post a Comment