Thursday 7 February 2013

தினக்குரல் பத்திரிகை​ விநியோகஸ்தர் மீது புலனாய்வு பிரிவினர் தாக்குதல்; யாழில் பத்திரிகைக​ள் மீது தொடரும் வன்முறை


யாழ்.மாவட்டத்தில் ஊடக அடக்குமுறையின் மற்றொரு பரிணாமமாக இன்று காலை யாழ்.தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்த்தர் ஒருவர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பத்திரிகைகளும், மோட்டார் சைக்கிளும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 4 மணியளவில் புத்தூர் சந்தியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் தேசிய தமிழ்ப் பத்திரிகையான தினக்குரல் மிக இக்கட்டான காலகட்டத்திலும் கூட யாழ்.மாவட்டத்தில் ஊடகப்பணியாற்றிய ஒரு பத்திரிகை.

இந்நிலையில் அண்மைக்காலமாக இந்தப் பத்திரிகை மீது குறிவைத்த படைப்புலனாய்வாளர்கள் இன்று காலை விநியோகஸ்த்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சி.சிவகுமார் (வயது40) என்ற புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் படுகாயமடைந்துள்ளார்.


மேலும் இந்தச் சம்பவத்தின்போது 4 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கம்பிகள், பொல்லுகளால் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


 தற்போது காயமடைந்த குடும்பஸ்த்தர் அச்சுவேலி வைத்தியசாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊடகங்களின் வாயை மூடுவதற்கு அரசாங்கமும், படைப்புலனாய்வாளர்களும் கடும் பிரயத்தனம் எடுத்திருப்பதன் ஒரு பாகமே, அண்மையில் வடமராட்சியில் உதயன் பத்திரிகை விநியோகஸ்த்தர் தாக்கப்பட்ட சம்பவமும், தற்போது தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்த்தர் தாக்கப்பட்ட சம்பவமுமாகும்.


இந்த இரு பத்திரிகைகளும் அடக்கப்பட்டால், தேசிய நிலைப்பாட்டை மக்களுக்கு வேறு யாரும் கூற முடியாது என்ற நிலைப்பாட்டிலும் இராணுவ அத்துமீறல்களை யாரும் சுட்டிக்காட்டமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டிலுமே இந்த தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேரில் அனைத்தையும் பார்வையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment