Saturday 9 March 2013

புலிகளின் முன்னாள் தளபதி விநாயகம் விடுக்கும் ஊடக அறிக்கை


விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் என ஒரு அறிவிப்பை முன்னாள் போராளியான விநாயகம் அவர்கள் மின்னஞ்சல் வழியாக வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுது யாதெனில்,

அன்பான தமிழ் மக்களுக்கும், விடுதலைப் போராளிகளுக்கும், முன்னாள் போராளி விநாயகம் ஆகிய நான், முக்கியமான அறிவித்தல் ஒன்றை இத்தால் விடுக்கின்றேன்.

நான் 2009 மே மாத காலப் பகுதியின் பிற்பாடு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் அவதூறுகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தேன். இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகப் பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டன.

2009 மே மாத காலப்பகுதியின் பின்னர் புலம்பெயர் நாடுகளிற் செயற்படத் தொடங்கிய தலைமைச் செயலகம் என்ற நிர்வாகக் கட்டமைப்பை இயக்குவது நான் தானென்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

உண்மையில் எனது பெயரைப் பயன்படுத்திக் குறிப்பிடப்பட்ட சிலராற் தலைமைச் செயலகம் என்ற நிர்வாகக் கட்டமைப்பு இயக்கப்படுகின்றது. தற்போது அந்த நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் எனது பெயரைப் பயன்படுத்தித் தமிழ் வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் நான் நேரில் அவதானித்துள்ளேன்.

தொடர்ந்தும் நான் மௌனமாக இருப்பது இப்படியான மோசமான செயற்பாடுகளுக்குத் தூண்டுகோலாக அமைந்து விடும் என்ற காரணத்தால் இந்த அறிவித்தலை வெளியிட முடிவு செய்துள்ளேன்.

எனக்குத் தலைமைச் செயலகம் எனப்படும் நிர்வாகக் கட்டமைப்புடனோ, அவர்களது செயற்பாடுகளுடனோ எவ்விதத் தொடர்புகளும் கிடையாது என்பதை அனைவருக்கும் தெளிவாக அறியத் தருகின்றேன்.

தலைமைச் செயலகப் பொறுப்பாளர் நான்தானென நினைத்துத் தலைமைச் செயலகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் போராளிகள் மற்றும் தமிழ்மக்கள் அனைவரும் இவ் விடயத்தினைக் கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள். கடந்த காலங்களில் ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்தியுள்ளீர்கள். இனி வரும் காலங்களில் ஊடக தர்மத்தை மீறி, யார் எது சொன்னாலும் அவற்றை எல்லாம் செய்திகளாக்கி, என்னைப் போன்ற போராளிகளின் சுயமதிப்புக்கு ஊறு விளைவிக்காதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ் அறிக்கை மின்னஞ்சல் மூலம் வெளிவந்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment