Wednesday 24 April 2013

அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த தமிழ் இளைஞன் மீது இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சித்திரவதை


 அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஏபிசி என்ற ஊடகத்திற்கு 7.30 செய்திக்கு அழைப்பை ஏற்படுத்திய இலங்கை பிரஜையான குமார் என்பவர் தனக்கு நடந்த துன்பத்தை கூறியுள்ளார்.

குமார் குறித்த ஊடகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தேன். இலங்கையிலுள்ள எனது உறவினருக்கு சுகவீனம் ஏற்பட்டபோது அண்மையில் இலங்கை சென்றிருந்தேன். 

அப்போது நானும் என்னுடைய சகோதரரும் ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டோம்.  கடத்திச் சென்றவர்கள் என்னை ஒரு இருட்டறைக்குள் பூட்டி வைத்தனர். உறங்க இடமின்றி நாய் போல நான் தரையில் விழுந்தேன்.

அப்போது நான் இறப்பதுபோல நினைத்ததோடு, தனது பிள்ளைகள் குடும்பத்தாரையும் ஒருநிமிடம் நினைத்துக் கொண்டேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் உனக்கும் தொடர்புள்ளதாக என கேட்டு என்னை சித்திரவதை செய்தனர்.
இதற்கு 2007ம் ஆண்டு நான் பஸ் சாரதியாக கடமை புரிந்த போது புலிகள் அமைப்பு வழங்கிய பொதி ஒன்றை எடுத்துச் சென்றமையே எனக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என கூறினேன்.

இலங்கை சென்றிருந்தபோது எனக்கு நடந்ததை மறக்க முடியாது. எனக்கு நேர்ந்ததுபோல் வேறு எவருக்கும் நேரக்கூடாது. வேறு எவரும் இவ்வாறான சித்திரவதைகளை அனுபவிக்க கூடாது எனவும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்.

தனி அறையில் வைத்து என்னை சிலர் தாக்கியதால் எனக்கு இப்போது முதுகெலும்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருட்டறைக்குள் குடிபோதையில் புகுந்த இருவர் என்மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டனர்.
நான் கடத்தப்பட்டு நான்காவது நாள் எனது உடலின் பின்பகுதியில் சூடான இரும்பினால் சூடு வைத்தனர். அப்போதே எனது வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணி அச்சப்பட்டேன்.

என்னுடைய உடலின் பின்புறத்தைப் பார்த்தால் சித்திரவதை சம்பவம் மிக அண்மையில் இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வர்.
20, 000 அமெரிக்க டொலர்களை லஞ்சமாக கொடுத்து எனது உறவினர் (மாமா) கடத்தியவர்களிடமிருந்து என்னை மீட்டார் இவ்வாறு குமார் அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இக்குற்றச்சாட்டு பொய்யானது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குமாருக்கு அவ்வாறு துன்புறுத்தல் நடந்திருந்தால் அவர் அது குறித்து தன்னிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிப்படையான நீதித்துறை விசாரணைகளை மேற்கொள்ளும் என திசர சமரசிங்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment