எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை ராஜ சுலோசனா நேற்றுக் காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. எம்ஜிஆர் நடித்த ‘இதயக்கனி படத்தில் வில்லியாக நடித்தவர் ராஜ சுலோசனா.
இவர் கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 3 நாட்களாக உடல்நிலை மோசமானது. மடிப்பாகம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 4வது குறுக்குதெருவில் உள்ள வீட்டில் பொது மக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவரது மகன் ஷியாம் சுந்தர் மற்றும் மகள்
ஸ்ரீ இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் சென்னை புறப்பட்டு
வருகின்றனர். மற்றொரு மகள் தேவி கணவருடன் சென்னையில் வசிக்கிறார்.
ராஜசுலோசனாவின் உடல் தகனம் நாளை, சென்னை பெசன்ட் நகரில் உள்ள
மின்மயானத்தில் நடக்க உள்ளது.
வாழ்க்கை குறிப்பு:
ராஜசுலோசனா 1935ம் ஆண்டு சித்தூரில்
பிறந்தவர். திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான சி.எஸ்.ராவ் என்பவரை
மணந்தார். கடந்த 7 வருடத்துக்கு முன்பு ராவ் இறந்துவிட்டார்.
தமிழில் ‘சத்யசோதனை படம் மூலம் நடிகையாக
அறிமுகமானார். தொடர்ந்து ‘பெண்ணரசி, ‘ரங்கூன்ராதா, ‘அம்பிகாபதி,
‘வணங்காமுடி உள்பட சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின்,
குணசித்ரம், வில்லி என பல்வேறு வேடங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக
‘எங்க வீட்டு வேலன் படத்தில் நடித்தார்.
17 வயதில் நடிக்க வந்த இவர் தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்திருக்கிறார். 25
வருடத்துக்கு முன் அமெரிக்கா சென்று செட்டிலானார். அங்கேயே தனது
பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்தார். பின்னர் மீண்டும் இந்தியா
திரும்பினார். அமெரிக்காவில் இருந்தபோது நடன பள்ளிகள் நடத்தி வந்தார்.


No comments:
Post a Comment