Thursday 10 April 2014

தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பில் சிக்கிய எப்படி? பாகம் 02


இலங்கையில் இறுதி யுத்தம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தபோது, இலங்கை உளவுத்துறை SIS-க்கு, வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து உளவுத் தகவல் ஒன்று வந்தது. வெளிநாட்டு உளவுத்துறை, வெறும் தகவலை மட்டும் கொடுக்கவில்லை. கொழும்புவில் இருந்த விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் பயன்படுத்திய போன் இலக்கத்தையும் கொடுத்தது.

இலங்கை உளவுத்துறையினர் இந்த செல் போன் இலக்கத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது, மறுமுனையில் யாரும் பேசவில்லை.
இது விடுதலைப் புலிகளின் வழமையான பாணி என்பது இலங்கை உளவுத்துறைக்கு தெரியும். கொழும்புவில் ஊடுருவியிருந்த விடுதலைப் புலிகள், தமது இயக்க வேலைகளுக்கு ஒரு பிரத்தியேக போன் வைத்திருப்பார்கள். சொந்த பாவனைக்கு வேறு போன் வைத்திருப்பார்கள். இயக்க பாவனைக்கான போனில், தமக்கு தெரிந்த, பரிச்சயமான இலக்கத்தில் இருந்து அழைப்பு வராவிட்டால், பேச மாட்டார்கள்.

இதனால், வெளிநாட்டு உளவுத்துறையிடம் இருந்து, விடுதலைப்புலி இணைப்பாளரின் செல் போன் இலக்கம் கிடைத்தும், உடனடி பலன் ஏதும் கிட்டவில்லை இலங்கை உளவுத்துறைக்கு.

அந்த இலக்கத்துக்குரிய சிம் கார்ட் யாருடைய பெயரில் எடுக்கப்பட்டது என்று பார்த்தபோது, போலி பெயர், மற்றும் முகவரியில் எடுக்கப்பட்ட சிம் என்று தெரிந்தது. அதிலும் பயனில்லை.

அந்த இலக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட போன் அழைப்புகள் பற்றிய தகவல்களை பெற்று அவற்றை செக் பண்ணினார்கள்.

இன்-கம்மிங், மற்றும் அவுட்-கோயிங் கால்கள், இரண்டும் சேர்த்து மொத்தம் 74 இருந்தன. இதில் 70 கால்கள் வெளிநாடுகளுக்கு போனவை, அல்லது, வெளிநாட்டில் இருந்து வந்தவை. 4 லோக்கல் கால்கள். இந்த 4 கால்களுமே மிஸ்ட்டு கால்கள். அவை இரு லோக்கல் இலக்கங்களை அழைத்த கால்கள்.
ஒரு லோக்கல் இலக்கத்துக்கு ஒரு கால், மற்றொரு இலக்கத்துக்கு மூன்று கால்கள். இரண்டு இலக்கங்களுமே, ஓரிரு எண்கள் மாறுபடும், நெருக்கமான இலக்கங்கள்.

இந்த இரு லோக்கல் இலக்கங்களையும் ஆராய்ந்தது இலங்கை உளவுத்துறை.
இவற்றில் ஒரு இலக்கம், தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட அழைப்பு என தெரிந்தது. அதை விட்டுவிட்டு மற்றைய இலக்கத்தை பார்த்தால், அது ஒரு எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி அலுவலகத்தின் இலக்கம்.

இதுதான், உளவுப் பிரிவுக்கு கிடைத்த முதலாவது தடயம்.

அந்த போன் இலக்கத்துக்குரிய எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சியை உளவுத்துறை கண்காணித்ததில், அதன் உரிமையாளர் வெளிநாடு சென்றிருப்பது தெரிந்தது.
விடுதலைப்புலி இணைப்பாளரின் போனில் இருந்து அழைப்புகள் வந்தபோது, எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர், இலங்கையில் இல்லை என்பதை, இமிகிரேஷன் இலாகா முலம் உறுதி செய்து கொண்டது உளவுத்துறை. அதுதான், விடுதலைப்புலி இணைப்பாளரின் அழைப்பு, மிஸ்ட்டு காலாக போயிருந்தது என்பது புரிந்தது.

எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளரின் பெயரை, இமிகிரேஷன் பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டது உளவுத்துறை.

இதையடுத்து இந்த நபர் வெளிநாட்டில் இருந்து கொழும்பு வந்து இறங்கியபோது, விமான நிலைய இமிகிரேஷனில் தடுக்கப்பட்டார். இமிகிரேஷன் அதிகாரிகளிடம் இருந்து தகவல் வரவே, விமான நிலையம் சென்று அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது, உளவுத்துறை.
எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளரை, விடுதலைப்புலி இணைப்பாளர் அழைத்த (அவரது சொந்த) இலக்கத்தில் இருந்து, வெளிநாட்டு உளவுத்துறை கொடுத்த செல் போன் இலக்கத்தை அழைக்க வைத்தார்கள், உளவுத்துறையினர்.

இப்போது, மறுமுனையில் போன் எடுக்கப்பட்டது. (காரணம், விடுதலைப்புலி இணைப்பாளருக்கு தெரிந்த, பரிச்சயமான இலக்கம் அது!)

உளவுத்துறையினர் சொல்லிக் கொடுத்தபடியே பேசினார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர். தாம் வெளிநாடு சென்றிருந்ததாகவும், இப்போது நாடு திரும்பி, தமது போனில் பதிவாகி உள்ள மிஸ்ட்டு கால்களை தொடர்பு கொள்வதாகவும் சொன்னார் அவர்.

மறுமுனையில் பேசியவர், “என்னை இந்த இலக்கத்தில் அழையுங்கள்” என மற்றொரு போன் இலக்கத்தை கொடுத்தார்.

இவர் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்பது ஓரளவுக்கு உறுதியானது. அவர் கொடுத்த மற்ற இலக்கத்தை அழைத்தார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர். முதலில் பேசிய அதே நபர், மறுமுனையில் பேசினார்.

இந்த அழைப்புகள், இலங்கை உளவுத்துறை SIS-ன் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. அந்த அலுவலகத்தின் கன்ட்ரோல் ரூமில், செல் போன்களை ட்ராக் செய்யும் வசதி இருந்தது.

அதில் இருந்து, எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளருடன் பேசியவர் வைத்திருந்த இரு செல்போன்களும், நீர்கொழும்பு (நிகொம்போ) பகுதியில் இருந்து பேசப்படுவதை, உளவுத்துறை தெரிந்து கொண்டது.

“என்ன விஷயம்?” என எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர் கேட்டபோது, மறுமுனையில் பேசியவர், “அவசரமான இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இது அவசரம்” என்றார்.

கொழும்பு நகரில் தங்கியுள்ள விடுதலைப்புலிகளில் யாராவது மீது, போலீஸ் சி.ஐ.டி, அல்லது உளவுத்துறையினரின் பார்வை பட்டுவிட்டால், உடனே அந்த நபரை எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவது என்பதும், விடுதலைப் புலிகளின் நடைமுறை என்பதை, உளவுத்துறை தெரிந்து வைத்திருந்தது.

“சரி. அனுப்பி வைக்கலாம். அது பற்றி பேச உங்களை எங்கு சந்திக்கலாம்?” என்று கேட்டார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர்.

மறுமுனையில் பேசியவர் (நிஜமாகவே விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவர்), நீர்கொழும்புவில் உள்ள இடம் ஒன்றை குறிப்பிட்டு, “இன்று மாலை 5 மணிக்கு அங்கு இருப்பேன். வாருங்கள், பேசலாம்” என்றார்.

(தொடரும்..)

Friday 4 April 2014

தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பில் சிக்கிய எப்படி? பாகம் 01


இலங்கை ராணுவத்துடன் நடந்த சுமார் 30 ஆண்டுகால யுத்தத்தின்போது, ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம், புலிகள் கையாண்ட முக்கிய தந்திரம், தெற்கே சிங்களப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்புவிலும் எதிர்பாராத இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதுதான்.


தற்கொலை தாக்குதல்கள் மூலம் வெடிக்கும் வெடிகுண்டுகளால் பலத்த சேதம் ஏற்படும். அல்லது, இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர் கொல்லப்படுவார். அதையடுத்து, இலங்கை ராணுவம் அடக்கி வாசிக்க தொடங்கும். புலிகளுக்கு தம்மை பலப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கும்.

1990களில் இருந்தே நடந்துவந்த நடைமுறை இது. புலிகளின் உளவுத்துறையின் ஒரு பிரிவும், தற்கொலை போராளி பிரிவான கரும்புலிகளும் இணைந்து நடத்திய குண்டுவெடிப்புகள் அவை.
இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நகரமாக கைவிட்டு பின்வாங்கி சென்றுகொண்டிருந்தபோதும், இந்த தந்திரம் கடுமையாக முயற்சிக்கப்பட்டது. ஆனால், முன்பு கிடைத்தது போன்ற வெற்றிகள் புலிகளுக்கு கிடைக்கவில்லை.

இறுதி யுத்தம் நடந்தபோது நடந்த சம்பவங்களை கவனமாக பார்த்தீர்கள் என்றால், யுத்தத்தின் இறுதி மாதங்களில், சிங்களப் பகுதிகளிலோ, கொழும்புவிலோ எந்தவொரு குண்டும் வெடிக்கவில்லை என்பதை கவனிக்கலாம். அந்த காலப்பகுதியில் எந்தவொரு தற்கொலை தாக்குதலும் நடக்கவில்லை.

சில தமிழ் மீடியாக்களில், “விடுதலைப் புலிகள், தற்கொலை தாக்குதல் நடத்தி வெளிநாடுகளின் அதிருப்தியை சம்பாதிக்க விரும்பாத காரணத்தாலேயே, அவற்றை முழுமையாக நிறுத்திவிட்டு, நேரடியாக சண்டைபோட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கிச் சென்று, அனைத்தையும் முழுமையாக இழந்தார்கள்” என விளக்கம் கொடுக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.
நிஜமாக நடந்தது என்னவென்றால், இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொழும்புவில் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஏதையும், அவர்களால் நடத்த முடிந்திருக்கவில்லை. காரணம், கொழும்புவில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய இணைப்பாளர்கள் ஒவ்வொருவராக இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

அவர்களில் பலர், தற்போதும் இலங்கை சிறைகளில் உள்ளார்கள். உரிய அனுமதி பெற்று சென்று அவர்களை சந்தித்து கேட்டால், விளக்கமாக சொல்வார்கள். இப்போது இந்த விவகாரங்கள் எதுவும் ரகசியம் கிடையாது.
இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமது நிலைமை மிக மோசம் என்பதை புரிந்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தை நிறுத்தினால்தான், தம்மை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள். இதற்குமுன், போர் நிறுத்தத்தை கொண்டுவர உதவிய வெளிநாடுகள், கழுவிய நீரில், நழுவிய மீனாக இருந்தன.

இதனால், கொழும்புவில் பெருமளவில் குண்டுகள் வெடித்து நாட்டையே அதிரவைத்தால்தான், முன்னேறும் ராணுவத்தை தடுத்து நிறுத்த முடியும் என்ற நிலை.

இலங்கையின் தெற்கு பகுதியில், முக்கியமாக கொழும்புவின் புறநகர பகுதியில், பல இடங்களில் விடுதலைப்புலிகளால் வெடிகுண்டுகளும், ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை வெடிக்க வைப்பதற்காக தற்கொலை தாக்குதல்கள் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட கரும்புலிகளும், கொழும்புவின் வெவ்வேறு பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து போய் இருந்தார்கள்.

இந்த கரும்புலிகள், தாமாக மறைவிடத்துக்கு போய், வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்று வெடிக்க வைப்பது என்பதல்ல நடைமுறை.
தற்கொலை தாக்குதல் செய்ய தயாராக இருந்த கரும்புலிகளுக்கே, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த மறைவிடங்கள் தெரியாது. வன்னியில் இருந்த புலிகளின் உளவுப்பிரிவு தலைமைக்கும், இந்த கரும்புலிகளுக்கும் இடையே இணைப்பாளர்களாக இருந்த சிலருக்கு மட்டுமே, இந்த மறைவிடங்கள் தெரியும்.

இந்த இணைப்பாளர்களே, வன்னி யுத்த களத்துக்கு வெளியே நடந்த தாக்குதல்களுக்கு முதுகெலும்பு போன்றவர்கள்.

எப்படியென்றால், கொழும்புவில் இருந்த இந்த இணைப்பாளர்களிடம்தான் வன்னியில் இருந்து கரும்புலிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் தங்குவதற்காக வெவ்வேறு மறைவிடங்களை ஏற்பாடு செய்வது இந்த இணைப்பாளர்களே. அத்துடன், வன்னியில் இருந்து வெடிப் பொருட்கள் வருவதும் இந்த இணைப்பாளர்களுக்குதான். வெடிப் பொருட்களை கொழும்புவின் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைப்பதும், இந்த இணைப்பாளர்களே.

அதன்பின், வன்னியில் இருந்து உத்தரவு வரும், குறிப்பிட்ட பிரமுகரையோ, இலக்கையோ தாக்கும்படி.

அந்த தாக்குதலை நடத்த உரிய இடத்தை தேர்ந்தெடுப்பது, மறைவிடத்தில் உள்ள கரும்புலி ஒருவரை தயார் செய்வது, வேறொரு மறைவிடத்தில் உள்ள வெடிகுண்டை கரும்புலியிடம் கொடுப்பது, உடலில் குண்டு பொருத்தப்பட்ட கரும்புலியை, தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தில் கொண்டுபோய் சேர்ப்பது எல்லாமே, இந்த இணைப்பாளர்களின் கையில்தான்!

மொத்தத்தில், வன்னியில் இருந்தவர்களுக்கு, கொழும்புவில் கரும்புலிகளின் மறைவிடங்கள் எங்கே என்று தெரியாது. கொழும்புவில் இருந்த கரும்புலிகளுக்கு, கொழும்புவில் வெடிகுண்டுகள் இருந்த மறைவிடங்கள் எங்கே என்று தெரியாது. அனைத்தும் தெரிந்தவர்கள், இந்த இணைப்பாளர்கள்.
இப்படியான இணைப்பாளர்கள்தான், இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொழும்புவில் ஒவ்வொருவராக சிக்கிக் கொண்டார்கள்!

இறுதி யுத்தம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தபோது, இலங்கையின் உளவுத்துறை SIS-க்கு (State Intelligence Service), வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து உளவுத் தகவல் ஒன்று வந்தது.

(இலங்கை உளவுத்துறை SIS, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு. முன்பு National Intelligence Bureau என்ற பெயரில் செயல்பட்ட அமைப்புதான், SIS என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் தற்போதைய டைரக்டர், சந்திரா வாஹிஸ்த)
வெளிநாட்டு உளவுத்துறை, தமது நாட்டில் இருந்த விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளர் ஒருவருடைய போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது, வெளிநாட்டு விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளரிடம் இருந்துதான், கொழும்புவில் உள்ள இணைப்பாளர்களுக்கு உத்தரவுகள் போவதை, வெளிநாட்டு உளவுத்துறை தெரிந்து கொண்டது.

இந்த காலப்பகுதியில் (2009-ம் ஆண்டு ஆரம்பம்), அந்த வெளிநாட்டுக்கு அவர்களது நாட்டில் விடுதலைப் புலிகளால் பலத்த இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்தது.

அதை தடுக்க முயன்றால், அரசியல் ரீதியாக குறிப்பிட்ட வெளிநாட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.

இதனால், ஆர்ப்பாட்டங்களை வெளிப்படையாக தடுக்காமல், இதற்கெல்லாம் மூல காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை, இலங்கையில் முடித்து விடுவது நல்லது என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையிலேயே, தமது நாட்டில் இருந்து, கொழும்புவில் உள்ள இணைப்பாளர் ஒருவருக்கு உத்தரவுகளை கொடுக்கும் வெளிநாட்டு செயற்பாட்டாளர் தொடர்பான உளவுத் தகவலை, இலங்கை உளவுத்துறை SIS-க்கு கொடுத்தது, வெளிநாட்டு உளவுத்துறை.

வெளிநாட்டு உளவுத்துறை, வெறும் தகவலை மட்டும் கொடுக்கவில்லை. கொழும்புவில் இருந்த விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் பயன்படுத்திய போன் இலக்கத்தையும் கொடுத்தது. “கொழும்புவில் உள்ள இந்த இலக்கத்தில் இருந்து அழைத்துதான், உத்தரவுகளை பெற்றுக் கொள்கிறார்கள்”

(தொடரும்..)

Tuesday 18 March 2014

வடக்கில் தொடரும் இராணுவ அடாவடி


 வடபுலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் மற்றும் அடாவடித்தனங்களால் வன்னி அதிர்ந்தவண்ணமுள்ளது. கிளிநொச்சியில் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் கைதுசெய்யப்பட முன்னர் மார்ச் 12 ஆம் திகதி திருமலை பாலையூற்றைச் சேர்ந்த பாலகுருபரன் தர்மிலா என்கின்ற கர்ப்பிணி தாய் அவரது நான்கு வயது மகனுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவரது கணவரும் யாழ்ப்பாணம் ஏழாலைப்பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதேநாள் விசுவமடுவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய் மற்றும் இருபிள்ளைகள் கைதாகியுள்ளனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிள்ளைகளுள் ஒருவரான் நிதர்சனா – வயது 27 பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில்இரு இளைஞர்கள் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதல்களின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை அப்பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய யோ. கலாதரன் என்பவரின் சாயலை ஒத்த புகைப்படத்தை அங்குள்ள கடைகளிலும் வீதியில் சென்றவர்களிடமும் காட்டி விசாரித்துள்ளனர்.

அதன் பிரகாரம் ஆனந்தபுரம் வீதியிலுள்ள குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவருக்கு கைவிலங்கைப் போட்டுக் கைது செய்தனர். இச்சம்பவத்தை தொலைபேசியில் வீடியோப் பதிவு செய்ய முயற்சி செய்த குறித்த இளைஞனின் தம்பியான யோ. 31 வயதுடைய சுதாகரன் என்பவரையும் தமது பணிக்கு இடையூறு விளைவித்தார் எனக் கூறி அவரையும் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தனர்.

எனினும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பளையில் நேற்றும் இளைஞரொருவர் கைதாகியுள்ளார். இதையடுத்து கைதானவர்களது எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியினில் மற்றுமொரு இளைஞன் நேற்று கைதான போதும் அவர் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளான். இன்று காலை வரையாக வன்னியில் எண்மர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.