Friday 29 March 2013

கொழும்பில் முஸ்லிம்கள் மீது சிங்களவர் இனவெறித்தாக்குதல்

 

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவ பெப்பிலியான சந்தியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரபல துணிக்கடை ஒன்றின் மீது பௌத்த பிக்குகள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 வன்முறைக் கும்பலொன்று கடையின் மீது கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்தியதுடன் கடை உரிமையாளர்களையும் கீழ்த்தரமாக விமர்சித்து கோசமிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பிக்குகள் தலைமையிலான கூட்டம் திடிரென்று 500 பேரளவில் அதிகரித்ததாகவும், அவர்கள் அங்கு கூடிய ஊடகவியலாளர்களையும் சுற்றிவளைத்துக் கொண்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

 வன்முறைகள் பரவமுன்னர், அங்கிருந்த பொலிசார் வன்முறையாளர்களைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். வன்முறைகள் பரவிய பின்னரே, பொலிசார் பின்னர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. 'சிறப்பு அதிரடிப் படையினரையும் காவல்துறையினரையும் மேலதிகமாக ஈடுபடுத்தி பிரதேசத்துக்கு பாதுகாப்பு' அளித்துவருவதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் புத்திக சிறிவர்தன ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

 'சில மணிநேரத்துக்குள்' நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், காதல் விவகாரம் ஒன்றினாலேயே இந்தத் துணிக்கடை மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குவந்த பின்னர், அங்கு கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு அமைப்புகள் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களுக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. வரும் ஏப்ரல்மாத புத்தாண்டுத் தருணத்தில் மக்கள் முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்கக்கூடாது என்று கடும்போக்கு பௌத்த வாத அமைப்புகள் தொலைபேசி எஸ்எம்எஸ் மூலம் பிரச்சாரம் செய்துவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Wednesday 27 March 2013

ஐ.பி.எல் . கேலிச் சித்திரம்


"கருணா முன்னிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரபா மகன்; உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" - பாலச்சந்திரன் மெய்பாதுகாவலர்


விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பாதுகாவல்களில் ஒருவர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சில புதிய தகவல்களை அவர் வெளியிட்டார்.

பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர் நடந்த போது அந்த 5 பாதுகாவலர்களையும் பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்ப வைத்தார்.

அவர்களில் ஒரு பாதுகாவலர் கடந்த வாரம் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சில புதிய தகவல்களை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

பாலச்சந்திரன் நன்றாக படிப்பான். புத்தகம் வாசிப்பதில்தான் அவன் அதிக நேரத்தை செலவிடுவான். அவனுக்கு பெரும்பாலும் தனிமையில் இருப்பதுதான் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது.

சார்லஸ் போன்று அவனிடம் போராட்ட குணம் இருந்தது இல்லை. தலைவர் எங்களை ஈழத்தில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பிய போது சிங்கள இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் குடும்பத்தினரின் படங்கள் இருப்பதை அறிந்தோம்.

தலைவர் குடும்பத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று அவர்கள் வெறி கொண்டு அலைந்தனர். அவர்களுக்கு கருணா பக்கபலமாக இருந்தார்.
பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டபோது, அங்கு கருணா இருந்துள்ளார். அவர்தான் பாலச்சந்திரனை பிரபாகரன் மகன் என்று அடையாளம் காட்டியுள்ளார்.

அவரது கண் முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

முதலில் எங்களுக்கு இது தெரியவில்லை. ஜெனீவா நகரில் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிய போதுதான் கருணாவின் துரோகம் தெரிந்தது.

பாலச்சந்திரனுக்கு போர் பற்றி எதுவுமே தெரியாது. அப்பாவியான அந்த பாலகனுக்கு ஏதோ சாப்பிட கொடுத்து விட்டு சுட்டிருக்கிறார்கள்.
ஒரு பிஞ்சு உயிரை அருகில் நின்று சுட்டு பறித்தவர்கள் எந்த அளவுக்கு கொடியவர்களாக இருப்பார்கள் என்று பார்த்து கொள்ளுங்கள்.

ஆனால் எங்கள் தலைவர் தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் உலக மக்களின் எழுச்சி தமிழ் ஈழத்தைப் பெற துணை நிற்கும் என்றார். தற்போது அதுதான் நடக்க தொடங்கியுள்ளது.

ஈழத்தில் இருந்து வெளியேறிய நாங்கள் தற்போது ஒன்று சேர தொடங்கியுள்ளோம். முக்கிய மூத்த தலைவர்கள் பலர் உயிருடன் இருப்பது எங்களுக்கே இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

நாங்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்த போது மீண்டும் தலைவரிடம் இருந்து உத்தரவு வரும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்றனர். இப்போது நாங்கள் அந்த உத்தரவை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.
இவ்வாறு அந்த விடுதலைப்புலி பாதுகாவலர் கூறினார்.

மீண்டும் இலங்கை செல்வோருக்கு பயண எச்சரிக்கை விடுத்த பிரிட்டன்


இலங்கை அரசாங்கம் தற்போது மேற்குலக நாடுகள் மீது தனது வலுவான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை காரணமாக, இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான மேற்கத்தைய எதிர்ப்பு நிலை காரணமாக அங்கு பயணம் செய்யும் தனது நாட்டுப் பிரஜைகள் கவனமாகச் செயற்பட வேண்டுமெனவும் அது கேட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பிரித்தானிய துதுவராலயம் உட்பட ஏனைய வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரஜைகள் ஆபத்துகளை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்பட்டாலும், வேறு பல சம்பவங்கள் மூலம் அவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன் இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் அரச பயங்கரவாதம் மேலோங்கிக் காணப்படுகிறது.
தடுத்து வைத்தல், கைது போன்றன இடம்பெறுகின்றன.

இராணுவக் கெடுபிடிகள், சோதனைச் சாவடிகளும் இலங்கையில் தாராளமாகவே காணப்படுகின்றன.

ஆயுதக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் தொடர்வதாகவும் பிரித்தானியா அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Genocide of Tamils in Sri Lanka










Sunday 24 March 2013

பிரித்தானியாவில் மிக இளவயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 7வயது தமிழ்ப்பெண் எழுந்தார்


Britain’s youngest gun-crime victim (அதாவது பிரித்தானியாவில் மிக இளவயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்) என்று அழைக்கப்படுபவர் துஷா கமலேஸ்வரன் ஆவார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நெஞ்சில் காயமடைந்த துஷாவுக்கு அப்போது வயது 5 ஆகும். வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில் இரு இளைனர் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி மோதலில் அந்த வர்த்தக ஸ்தாபனத்தில் தனது தாயுடன் நின்று இருந்த துசா எனும் இச்சிறுமி மீதும் எதிர்பாராத விதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிக் குண்டு பின் முதுகுவழியாக ஊடறுத்துச் சென்றதால் அவர் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டது. பல மாதங்களாக கோமா நிலையில் இருந்த துஷா பின்னர் கண் விழித்தார். அவரால் இனி வாழ்க்கையில் நடக்கவே முடியாது என்று மருத்துவர்களும் நரம்பியல் நிபுணர்களும் கூறிவிட்டனர். சக்கர வாகனத்தில் தான் இவர் செல்ல வேண்டும் என்று இவரால் எழுந்து கூட நிற்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால் “யார் சொன்னது ஈழத் தமிழச்சியால் இனி எழுந்து நடக்க முடியாது” என்று? என்று கூறுவதைப் போல அவர் தன் முயற்சியை கைவிடவில்லை !
ஆம்! தற்போது துஷா எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளார். அதுவும் தன் சுய கால்களால். இது மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இனி அவர் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் 2முறை இதயத் துடிப்பு நின்று, பரா மெடிக்ஸ் உதவியோடு அவர் இதயம் மீண்டும் இயங்க வைக்கப்பட்டு பின்னர் அவசரமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

பல சத்திர சிகிச்சை நடைபெற்று இறுதியில் உயிர்பிழைத்தார். உயிருடன் இருந்தாலே போதும் என்ற நிலை மாறி தற்போது அவரால் எழுந்து நிற்க்கக் கூடிய நிலை கூடத் தோன்றியுள்ளது. குறிப்பாக அவருக்கு நம்பிக்கை ஊட்டி அவரை மிகவும் ஆதரவுடன் கவனித்துக் கொள்வது, அவரது தாயார், தந்தை, சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரே என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். பாரதி கூறிய நம்பிக்கை என்னும் ஒளிபடைத்த புதுமைப் பெண் இவள் தானோ ? 

 

மீன ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறுகிறார். "தருமபுத்திரர் நாலிலே வனவாசம் போனது' என்பது பாடல். இதற்கு முன்பு இருந்த 3-ஆம் இடத்துக்கு "தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என்பது பாடல். ஆகவே குருவைப் பொறுத்தவரை 3-ஆம் இடமும் சரி; 4-ஆம் இடமும் சரி- இரண்டு இடங்களுமே சரியில்லாத இடங்கள்தான். அப்படியானால் இந்த குருப்பெயர்ச்சி மீனராசிக்காரர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்யாதா என்ற சந்தேகம் வேண்டாம். குரு உங்கள் ராசிநாதன் என்ற பெருமையால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைக் கெடுக்கமாட்டார்.

அதேசமயம் மீனராசிக்கு 8-ல் சனியும் ராகுவும் இருப்பது குற்றம்தான். அதனால் சில சங்கடங்கள், சஞ்சலங்கள் ஏற்படலாம். என்றாலும் அவர்களை குரு பார்ப்பதால், "குரு பார்க்க கோடி தோஷம் போகும்' என்ற விதிப்படி தோஷ நிவர்த்தியாகும்.

பொதுவாக 4-ஆமிடம் குருவுக்கு மோசமான இடம்தான். குரு இயற்கையில் ஒரு சுபகிரகம். அவர் 4-ல் கேந்திரமாக இருப்பது கேந்திரதோஷம் எனப்படும். அதுமட்டுமல்ல; மீனராசிக்கு 10-க்கு உடையவர். 10-ம் ஒரு கேந்திரம். சுபகிரகமாகிய குரு கேந்திராதிபத்யம் பெறுவது கேந்திராதிபத்திய தோஷம். அதுவும் தவிர, கேந்திராதிபதி மற்றொரு 4-ஆம் இட கேந்திரத்தில் நிற்பது கேந்திர தோஷம்தான்.

ஒருவழிப்பாதையில்  (No Entry) வாகனம் ஓட்டிச்சென்றால் சட்டப் படி குற்றம்- தண்டனை உண்டு. ஆனால் அவசர நிமித்தம் உயிருக்கு மன்றாடும் ஒரு நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேன் போனாலும் அல்லது தீயணைக்கும் வாகனம் போனாலும் அது சட்டப் பிரச்சினை ஆகாது. அதேபோல ஒரு குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் வேன் விரட்டிப்போனாலும் குற்றமாகாது. அது விதிவிலக்கு! அதேபோல ராசிநாதன் அல்லது லக்னநாதனுக்கு எந்த தோஷமும் கிடையாது. விதி விலக்கு  உண்டு. அவர்கள் நின்ற இடம் மேன்மை யடையும்; பாதிக்காது. ராமன் சென்ற இடம் அல்லது ராமன் நின்ற இடம் அயோத்தி என்று சொல்லுவதுபோல! ஆகவே 4-ல் ராசிநாதன் குரு இருப்பதால்- 4-ஆமிடத்து தோஷம் பாதிக்காது என்பதால், அந்த பயத்தை விலக்கி தைரியம் அடையலாம்.

ஆனால் மீனராசிக்கு 2-ல் கேது நிற்பதும், 8-ல் சனியும் ராகுவும் நிற்பதும் தோஷம்தான்; குற்றம்தான். 2-ல் உள்ள கேது மீனராசிக்கு 12-ஆம் இடம், 8-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 8-ல் உள்ள ராகு மீனராசிக்கு 6-ஆம் இடம், 2-ஆம் இடம், 10-ஆம் இடங் களைப் பார்க்கிறார். ராகுவும் கேதுவும் தான் நின்ற இடத்திலிருந்து 3, 7, 11-ஆம் பார்வை பார்க்கும். அதே போல 8-ல் உள்ள சனி 10-ஆம் இடம், 2-ஆம் இடம், 5-ஆம் இடங்களைப் பார்க்கிறார். சனிக்கு 3, 7, 10-ஆம் பார்வை உண்டு. (ராகு- கேது எதிர்மறைப் பார்வை (ஆய்ற்ண் ஈப்ர்ஸ்ரீந்) பார்க்கும்).

இதில் குருவின் பார்வை மீனராசிக்கு 8, 11, 12-ஆம் இடங்களுக்கு கிடைப்பதால் மேற்கண்ட கேது, சனி, ராகு பார்க்கும் இடங்களான 10, 12-ஆம் இடங்களுக்கான தோஷம் விலகிவிடும். குரு 4-ல் இருப்ப தால், 4-ஆம் இடத்தை கேது பார்க்கும் தோஷமும் விதிவிலக்காகும். அதனால் 2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம்; 5-ஆம் இடம் புத்திரஸ்தானம், மனது, திட்டம், மகிழ்ச்சி போன்றவற்றில் மட்டும் மீனராசிக்காரர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம்.

ஒரு கெட்டவனோடு ஒரு நல்லவன் சேர்ந்தால்- அந்த நல்லவன் சபலம் உடையவனாகவும் சலனம் உள்ளவனாகவும் உறுதி யற்றவனாகவும் இருந்தால் நல்லவனும் கெட்டவனாக மாறிவிடுவான். லஞ்சம் வாங்கும் பல ஊழியர்களோடு வேலை பார்க்கும் ஒருவன் மட்டும் நேர்மையாக வாழமுடியாது. அவனையும் மற்றவர்கள் மாற்றிவிடுவார்கள். அல்லது அவனை எதிலாவது மாட்டி விடுவர்கள். லஞ்சம் வாங்காமல் கெட்டபெயர் எடுப்பதை விட, லஞ்சம் வாங்கியே கெட்ட பெயர் எடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விடுவான். இதுதான் சகவாச தோஷம்.

ஒரு குடிகாரகன் தன்னுடன் சேர்ந்த நல்லவனையும் குடிக்கவைத்து விடுவான். இங்கு மூன்று விதமான பலன் நடக்கலாம். ஒன்று, அந்த நல்லவன் குடிகாரனைத் திருத்தலாம். அல்லது நல்லவனும் கெட்டுப் போய் அவனோடு சேர்ந்து குடிக்கலாம். முடியாத பட்சத்தில் எக்கேடோ கெட்டுப்போய் தொலையட்டும் என்று, குடிகாரனைவிட்டு நல்லவன் ஒதுங்கி விடலாம்.

இந்த உதாரணக் கணக்குப்படி குரு நல்லவர் என்பதோடு ராசிநாதன் என்ற தன்மையால், ராகு, கேது, சனியும் நல்லவர்களாகி விடுவார்கள். அவர்கள் பார்க்கும் இடங்களையும் கெடுக்காமல் விட்டு விடுவார்கள்.

குரு 4-ல் நிற்கிறார். 4-ஆம் இடம் தாய், தன் சுகம், கல்வி, வீடு, வாகனம், பூமி ஆகிய அம்சங்களைக் குறிக்கும். ராசிநாதனே அங்கு இருப்பதால் இவை யாவும் அனுகூலப் பலன்களாக நடக்கும். மேற் படிப்பு யோகம், பாடத்தில் அரியர்ஸ் இருந்தால் அவற்றை எழுதி பாஸ் செய்வது, அட்டமத்துச் சனி நடப்பதால் வெளிநாடு போய் படிக்கும் யோகம், பிளாட் வாங்குவது, கட்டடம் கட்டுவது, புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வது போன்ற பலன்கள் உண்டாகும். அட்டமத்துச் சனி தொடங்கி ஓராண்டுக்குமேல் ஆகிறது. கடந்த ஓராண்டாக உடல் நலக் குறைவு, தேவையற்ற வைத்தியச் செலவு, ஆஸ்பத்திரி அலைச்சல் என்று அவதிப்பட்டவர்களுக்கு இனி மாறுதலும் ஆறுதலும் உண்டாகும். முழு அளவில் ஆரோக்கியம் ஏற்படும். உங்களுக்கோ குடும்பத்தினருக்கோ இனி சுகம் உண்டாகும். அதேபோல தாயாருக்கு முழங்கால் வலி, மூட்டுவலி, கழுத்து வலி அல்லது நரம்புத் தளர்ச்சியால் அவதிப்பட்ட நிலை மாறிவிடும். சிலருக்கு டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகம் உண்டாகும். வங்கிக் கடன் வாங்கி புதிய வாகனம் வாங்கலாம். சிலர் பழைய காரை கொடுத்து புதிய கார் வாங்கலாம். சிலர் ஏற்கெனவே சிறிய கார் இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் பயணம் போகும்படி சுமோ, ஸ்கார்ப்பியோ, இன்னொவா போன்ற பெரிய கார்கள் வாங்கலாம். ஒரு சிலர் தொழில் அடிப்படையில் "டி-ஃபோர்டு' வாகனம் வாங்கி பிசினஸ் செய்யலாம்.

கடந்த காலத்தில் சனி கன்னியில் இருந்தபோது 4-ஆம் இடத்தைப் பார்த்ததால், 4-க்கு 6-ல் ராகுவும் இருந்ததால், தாய்க்கும் உங்களுக்கும் ஆகாத காலமாக இருந்தது. என்னதான் தாய் தெய்வத்துக்கு சமமானவர் என்றாலும், உங்கள் கிரக அமைப்புப்படி தாயே உங்களுக்கு வேண்டாதவராக மாறியதும் உண்டு. நீங்கள் எவ்வளவு பந்த பாசத் தோடு தாயைப் பரிபாலனம் செய்தாலும், அந்த அம்மாளுக்கு உங்கள்மேல் மனத் திருப்தியும் மன நிறைவும் ஏற்பட்டிருக்காது. மகள் மீதுதான் அளவு கடந்த பாசமாகி நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுப்பார்.  அல்லது ரகசியமாக சேர்த்து வைத்த சிறுவாடு சேமிப்பு களையெல்லாம் உங்கள் கஷ்டத்துக்குக்கூட கொடுத்து உதவாமல் மகளுக்கே கொடுத்திருக்கலாம். அல்லது மூத்த மகனுக்கு கொடுத்திருக்க லாம். அதாவது நீங்கள் வளர்க்கும் கோழி- அடுத்த வீட்டில் போய் முட்டையிட்டு வந்துவிடும்.

இந்த குருபெயர்ச்சிக்குப் பிறகு அந்தநிலை மாறிவிடும். இருக்கும்வரை பிடுங்கிக்கொண்ட மகள் எதுவும் இல்லையென்றதும் தாயைக் கழற்றிவிடவும், தாய்க்கு இனிமேல்தான் மகன்மேல் பாசம் திரும்பும். நீங்களும் தாயின் நடவடிக்கையை எண்ணி ஆத்திரப் படாமல்- வெறுப்பு அடையாமல் அம்மாவை அரவணைத்து ஆதரவு காட்டவேண்டியது உங்கள் கடமை. யாராக இருந்தாலும் ஒரு மகனானவன் குடியிருந்த கோவிலை இடிக்கக்கூடாது. இறுதிக் கடமைகளை செய்யாமல் ஒதுக்கக்கூடாது. தந்தைக்கு  ஈமக்கடன் செய்யாவிட்டாலும் தோஷமில்லை. பெற்ற தாய்க்கு கண்டிப்பாக கருமக் கிரியை செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் மூன்று தலைமுறைக்கு அந்தப்பாவம் வாரிசுகளையும் தாக்கும். பட்டினத் தாரும் ஆதிசங்கரரும் துறவு பூண்டாலும்கூட, தாயின் அந்திமக் காலத்தில் தேடிவந்து, குடியிருந்த கோவிலுக்கு செய்யவேண்டிய கர்மாவைச் செய்து புண்ணியம் தேடினார்கள்.

இப்போது மிதுனராசிக்கு வந்துள்ள குரு 5-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதில் 8-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் பார்ப்பது நன்மையில்லை. ஆனால் 10-ஆம் இடத்தை 10-க்குடையவரே பார்ப்பது மிகமிகச் சிறப்பு- நன்மையே!

தொழில் துறையில் போட்டி, பொறாமைகள் குறுக்கிட்டாலும், கூட இருந்தே குழிபறிக்கும் நம்பிக்கை துரோகிகள் இருந்தாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது; பங்கமும் வராது; குறையும் வராது! "கெடுவார் கேடு நினைப்பார்' என்ற விதிப்படி உங்களைக் கெடுக்க நினைக்கிறவர்கள் கெட்டுப்போய் விடுவார்கள். அதனால் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள்; முன்னேறுவீர்கள். உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, உங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த உங்கள் உதவியாளர்கள், காலப்போக்கில் தகுதி யில்லாதவர்கள் என்று வெளியேற்றப் படுவார்கள். அதன்பிறகுதான் உங்கள் மேலிடத்தில் உங்களுக்கு செல்வாக்கு உண்டாகும். அசல் எது- போலி எது என்று தெரிவதற்கும் நேரம் காலம் தேவைப்படும். வீதியில் தொலைத்துவிட்ட பணப்பையை யாரோ ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டால், உடனே போய் வாங்கிவிட முடியாது. நீங்கள் தான் பைக்கு உரிமையானவர் என்பதை ஆதாரத்தோடு நிரூபித்த பிறகு தான் பெற்றுக் கொள்ள இயலும்.

8, 12-ஆம் இடங்களை குரு பார்ப்பதால், குடும்பத்தில் அர்த்த மில்லாத பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். மற்றவர்கள் உங்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், உங்கள் மனம் ஆணையிடுவதுபோல செயல்படுங்கள். "போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றுவேன்; எவர் வரினும் எதிர் வரினும் நில்லேன் அஞ்சேன்' என்று கவியரசு கண்ணதாசன் கூறியபடி உங்கள் போக்கில் போய்க்கொண்டே இருப்பீர்கள்.

சிலருக்கு ஊர்மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். மீனராசிக்கு அட்டமச்சனி நடக்கும்போது, குடும்பத்தில் இருவருக்கு ராகு அல்லது கேது தசையோ புக்தியோ நடந்தால்- தாய், தந்தை, குழந்தை என்று சேர்ந்துவாழ முடியாது. யாராவது ஒருவர் வெளிநாடு போகும் யோகம் உண்டாகும். 2014- டிசம்பர் வரை தற்காலிகப் பிரிவாக வெளியூர் அல்லது வெளிநாட்டு வாசம் ஏற்படலாம். அது உத்தியோகப் பிரிவாகவும் அமையலாம். சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால், அந்தப் பிரிவு  வருத்தமான பிரிவாகவும் இருக்கலாம். அப்படியிருந் தாலோ ராகு- கேது தசாபுக்தி நடந்தாலோ சூலினி துர்க்கா ஹோமம் செய்துகொள்ள வேண்டும். சந்திர தசாபுக்தி நடந்தால் ருத்ர ஹோமம் செய்து சிவலிங்கத்துக்கும் அம்பாளுக்கும் திங்கள்கிழமை ருத்ர ஹோமம் செய்ய வேண்டும். அத்துடன் திங்கள்கிழமை தோறும் தொடர்ந்து சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். சிவகங்கையில் சந்திரன் சாபவிமோசனம் பெற்ற சசி வர்ணேசுவரர் கோவில் சென்று வழிபடலாம். கும்பகோணம் அருகில் திங்களூர் சென்றும் சிவனுக்கு அபிஷேகம், பூஜைசெய்யலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம் செய்வார். செவ்வாய் மீனராசிக்கு 2, 9-க்குடையவர். குரு 1, 10-க்குடையவர். 9-க்குடையவர் சாரத்தில் 10-க்குடையவர் சஞ்சரிப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே எல்லா வகையிலும் உங்களுக்கு யோகமான காலமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தனவரவு, வரவேண்டிய பாக்கிசாக்கி வசூல் ஆவது. குறிப்பாக அரசு தரப்பிலிருந்து வரவேண்டிய பணம் வந்து சேருவது போன்ற அனுகூலம், ஆதாயம், லாபம் உண்டாகும். பாக்கியம் பெருகும். குடும்பத்துக்கு தேவைப்பட்ட ஆடம்பரப்பொருள் சேர்க்கையும், அத்தியாவசியமான பொருள் சேர்க்கையும் உண்டாகும். உங்கள் மனதை ஈர்க்கும் சித்தரின் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவும்.

திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். அதில் 26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாகவும்; பிறகு 26-1-2014 முதல் 13-4-2014 வரை வக்ரகதியாக இரண்டாவது கட்டமாகவும் குரு சஞ்சாரம் செய்வார். ராகு மீனராசிக்கு 8-ல் இருப்பதால், முதல் கட்டத்தில் குரு பார்வையால் நல்ல மாற்றங்களாக நடக்கும். வீடு, வேலை, உத்தியோகம் இவற்றில் விரும்பிய மாற்றமும் இடப்பெயர்ச்சியும் உண்டாகும். தகப்பனார் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகையில் லாப விரயம் அல்லது பரிவர்த்தனை யோகம் அமையும். அட்டமச்சனியோடு ராகு சம்பந்தம் என்பதால், நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தகிரி முருகன் கோவிலில் வழிபாடு செய்யலாம். சேந்தமங்கலம் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன், செல் 93454 38950-ல் தொடர்பு கொள்ளலாம். திண்டிவனம் அருகில் திருவக்கரை சென்று வழிபடலாம். முடிந்தால் அபிஷேக பூஜை செய்யலாம்.

இரண்டாவது கட்டத்தில் (வக்ரகதியில்) தேவையற்ற மனக்குழப்பம், குடும்பத்தில் அமைதிக்குறைவு, உடல்நலத் தொந்தரவு, தவிர்க்க முடியாத வைத்தியச் செலவு, முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம், தடை, தாமதம் ஆகிய பலன்களை சந்திக்கக் கூடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சூலினிதுர்கா ஹோமம் செய்யலாம். மாயவரம்- பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று, பிராகாரத்தில் உள்ள 12 நாகர் சிலை களுக்கு பாலாபிஷேகம் செய்யலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ராகு- கேது சிலை இருக்கிறது. அதற்கு அபிஷேக பூஜை செய்யலாம். கோவை மருதமலை சென்று பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதியை வழிபடலாம்.

புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம். இதிலும் குரு இரண்டு கட்டமாக சஞ்சரிப்பார். 28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்ட மாகவும்; பிறகு 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாவது கட்ட மாகவும் குரு சஞ்சாரம் செய்வார். இந்த இரண்டு கட்டத்திலும் குரு உங்களுக்குப் பரிபூரணமான யோகத்தையும் நன்மைகளையும் தருவார். பாரம்பரிமான பேரும் புகழும் உண்டாகும். கௌரவப் பட்டம், பாராட்டு, மரியாதை, அந்தஸ்து உண்டாகும். எல்லோரும் உங்களை வணங்கத்தக்க அளவு உயர்வும் பெருமையும் ஏற்படும். புதிய தொழில் யோகம், குடும்ப வாழ்க்கையில் மேன்மை, அளப்பரிய சாதனை, குடும்பத்தாரின் அன்பு, ஆதரவு, ஒத்துழைப்பு, ஆனந்தம் உண்டாகும். தேக சுகத்தில் தெளிவும் முன்னேற்றமும் ஏற்படும். வாகன யோகம் உண்டாகும். கட்டட சீர்திருத்தம், புதிய வீடு, மனை யோகம் ஏற்படும். சிலர் கடல்கடந்து போய்வரும் யோகமும் அமையும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

ராசிநாதனும் 10-க்குடையவருமான குரு 4-ல் அஸ்தமனம் என்பதால் கௌரவப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்.  தொழில் துறையிலும் அல்லது உத்தியோகத்திலும் போட்டி, பொறாமை, பிரச்சினைகள், எதிர்ப்பு, இடையூறுகளை சந்திக்க நேரும். சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சிலருக்கு குடியிருப்பு மாற்றங்களும் வரும். வாகனம் சம்பந்தமான பராமரிப்பு செலவுகளும் ஏற்படலாம். ஒருசிலருக்கு சிறு விபத்துகள் நேரலாம். அப்படிப்பட்டவர்கள் சென்னையை அடுத்துள்ள பாடி (திருவலிதாயம்) சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும். சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தில் திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்டோர் தரிசித்து பாடியுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து செல்லலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

வக்ரத்தில் உக்ரபலம் என்பதால், இக்காலம் முழுவதும் உங்களுக்கு யோகமான காலம்; நன்மையான காலம். பட்டம், பதவி, பாராட்டு கிடைக்கும். தொழில் உயர்வு, சம்பாத்திய மேன்மை உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் நிறைவு, நிம்மதி ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் உண்டாகும். வாகன யோகம் அமையும். புதிய வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம். மாணவர்களுக்கு மேற்படிப்பு யோகம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி அற்புத யோகங்களையும் நற்பலன்களையும் தரக்கூடும். எதிர்பார்த்த காரியங்களில் இனிய வெற்றியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். குருவின் நட்சத்திரம் பூரட்டாதி என்பதால், செல்வாக்கும் பெருமையும் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும். பிள்ளைகள் வகையில் திருமணம், வாரிசு, உத்தியோக உயர்வு, சம்பாத்தியம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம். சனி 8-ல் இருந்தாலும் குரு பார்ப்பதால்- குடியிருப்பு மாற்றம் அல்லது சீர்திருத்தம் அல்லது கட்டட விருத்தி ஏற்படும். உபதொழில் யோகம் அமையும். தனப் பெருக்கம் உண்டாகும். வயதானவர்களுக்கு பேரன் பேத்தி யோகம்- இளம் வயதினருக்கு திருமண யோகம் கூடும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:

ரேவதி புதன் நட்சத்திரம். புதன் 4, 7-க்குடையவர். புதன் வீட்டில்தான் குரு அமர்ந்துள்ளார். இந்த குருப்பெயர்ச்சியால் தேக ஆரோக்கியத்தில் தெளிவு, முன்னேற்றம் உண்டாகும். திருமணம், புத்திர பாக்கியம், பூமி, மனை, வீடு யோகம், சொந்தவீடு கனவு நனவாகுதல் போன்ற மங்கள நிகழ்வுகள் உண்டாகும்.

கும்ப ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

இதுவரை 4-ஆம் இடத்தில்- ரிஷபத்தில் இருந்த குரு 5-ஆம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார்.

2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் குருவுக்கு யோகமான இடங்கள். இந்த குருப்பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடையப் போகும் ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர்.

5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம்; மகிழ்ச்சி, திட்டம், எண்ணம், குரு உபதேசம், பக்தி, பூர்வ புண்ணியம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு புத்திரகாரகனும் தனகாரகனுமான குரு வந்தமர்வது நன்மை தரும். மக்கள் பேறு, மகிழ்ச்சி, உண்மையான வேலையாட்கள் அமைதல், சகலவித சம்பத்து, செல்வம், பாக்கியம் உண்டாகுதல், மந்திர உபதேசம் கிடைக்கப் பெறுதல், பக்தி, இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, தாய்மாமன் உதவி, பாட்டனார் பிதுரார்ஜித சொத்துகள் கிடைத்தல், நீண்டகால திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறுதல் ஆகிய நற்பலன்கள் உண்டாகும்.

திருமணமாகியும் வாôசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு ஆண் வாரிசு- பெண் வாரிசு யோகம் உண்டாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம், சடங்கு, மக்கட்பேறு போன்ற பாக்கியம் உண்டாகும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக் கேற்றபடி தரமான வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வாழ்க்கைத் தர மேன்மை உண்டாகும்.

2, 11-க்குடையவர் 5-ல் இருப்பதால் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபமங்கள நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, மகிழ்ச்சி நிலவும். படிப்பில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி அக்கறையாகப் படித்து, அரியர்ஸ் வைத்திருந்த பாடங்களில் பாஸ் செய்துவிடுவீர்கள். சிலர் மேற்படிப்பு படிக்கலாம். சிலர் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற முயற்சி மேற்கொள்ளலாம்.

மிதுனத்தில் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும் பார்க்கிறார்.

9-ஆம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், தகப்பனார் ஸ்தானம், பாக்கிய ஸ்தானம். தந்தைவழி ஆஸ்திகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளை பரிவர்த்தனை செய்து மாற்றம் செய்து ஏற்றம் பெறலாம். பங்கு பாகப் பிரிவினைகள் எதிர்பார்த்தபடி நடக்கும். சொத்து சுகம் இல்லாதவர்களுக்கு தந்தையின் நல்லன்பும் ஆசியும் கிடைக்கும். தெய்வத் திருவருளினால் எல்லா பாக்கியமும் உண்டாகும். ஆலய வழிபாடு, ஆன்மிகத் தொடர்பு, மகான்களின் ஆசிர்வாதம் ஏற்படும். குலதெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகவும்; சிலருக்கு அருள் இறங்கி அருள்வாக்கு சொல்லும் நிலையும் உண்டாகும்.

11-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் லாபம், வெற்றி, அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதரவழி சகாயமும் நன்மையும் ஏற்படும். தசா புக்திகள் பாதகமாக இருந்தால் சகோதர வகை பகையும் வருத்தமும் வரும். நீண்டகாலமாக நடைபெற்று வந்த வழக்குகளில் நல்ல தீர்ப்பும் வெற்றியும் உண்டாகும். அதனால் கணிசமான தொகையும் லாபமும் கிடைக்கலாம். மிதுன குரு உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமாகிய- தன் சொந்த வீடான தனுசுவைப் பார்ப்பது ஒரு தனிச்சிறப்பு.

ஒரு அரசு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் தன்மீது தவறில்லையென்றும், பணி நீக்கம் செய்தது சரியில்லை என்றும் ரிட்போட்டார். எட்டு ஆண்டுகள் வழக்கு நடந்தது. முடிவில் வெற்றி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு முழுச் சம்பளமும் பதவி உயர்வும் தர வேண்டும் என்று தீர்ப்பு.

ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் இழந்த பதவி, வேலை மீண்டும் கிடைக்கும். செல்வாக்கு பெருகும்.

கடந்த காலத்தில் குரு 4-ல் இருந்தபோது சிறிது காலம் கும்ப ராசிக்கு அட்டமச் சனி நடந்தது. அத்துடன் 4-ல் கேதுவும் 10-ல் ராகுவும் இருந்தன. அதனால் தாயாரின் உடல்நிலை பாதித்தது. சிலருக்கு அவர்களுக்கே (ஜாதகர்களுக்கே) உடல்நலம்  பாதித்தது. அல்லது உடன் பிறந்தவர்களுக்கு வைத்தியச் செலவு வந்தது. சிலருக்கு சகோதர உதவியால் குடியிருக்கும் வீடு சீர்திருத்தம் ஆனது. கும்ப ராசிக்கு ராசி நாதனும் விரயநாதனுமான சனி 8-ல் நின்று 10-ஆம் இடத்தையும் அங்கிருந்த ராகுவையும் பார்த்ததால், தொழில் பாதிப்பு, வேலையில் வேதனை, வாழ்க்கையில் சங்கடங்கள், வருமானத்தடை, தொட்ட தெல்லாம் பாதிக்கிணறு தாண்டிய மாதிரி அரைகுறை நிலை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, குடும்பத்தினரின் ஒத்துழைப்புக் குறைவு போன்ற பலன்களையெல்லாம் அனுபவித்திருக்கலாம்.

அன்று 4-ஆம் இடத்து குரு 8-ஆம் இடத்தைப் பார்த்ததால் கௌரவப் போராட்டம், கவலை, விபத்து, இழப்பு, ஏமாற்றம், நஷ்டம், கடன் விவகாரம், தேவையில்லாத கடன் வழக்கு ஆகிய பலன்களையும் சந்தித்திருக்கலாம். 10-ஆம் இடத்தை 4-ஆம் இடத்து குரு பார்த்ததால், இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஓட்டை பஸ் சைலன்ஸர் புகையைக் கக்கிக்கொண்டே போனாலும், நிற்காமல் பிரேக் டவுன் ஆகாமல் ஓடுவது போல் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நித்திய கண்டம் பூரண ஆயுள் என்பதுபோல!

9-ல் சனியும் ராகுவும் சேர்ந்த சமயம் சிலகாலம்- அவர்களுக்கு 8-ல் குரு சஷ்டாஷ்டகமாக இருந்தபோது பொருளாதார நெருக்கடியும், சில காரியங்கள் கைகூடுவதுபோல் தோற்றமளித்து கடைசி நேரத்தில் ஏமாற்றமாகி தள்ளிப் போனது. ஒரு சிலருக்கு மற்றவர்களின் வாக்குறுதி ஆறுதலைத் தந்தாலும், செயலில் நடக்காதது நம்பிக்கைத் தளர்வை ஏற்படுத்தியது. அதற்கு உதாரணமாகச் சொல்லுவதானால்- லாட்டரி டிக்கெட் வாங்கிய ஒருவர் தனக்கு பரிசு கிடைத்தால் உங்களுக்குப் பாதி தருகிறேன் அல்லது கடனையெல்லாம் அடைத்துவிடுகிறேன் அல்லது உங்களுக்கு தொழில் அமைத்துத் தருகிறேன் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிபோல சொல்லியிருக்கலாம். அவர் எதிர்பார்த்த மாதிரி அவருக்கும் லாட்டரி பரிசு கிடைக்காது. உங்களுக்கும் அவர் சொன்ன மாதிரி உதவியும் கிடைக்காது. நரி- எட்டாத திராட்சையைப் பார்த்து, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று விரக்தியால் விலகிப்போன மாதிரி ஒரு அனுபவமும் கிடைத்திருக்கலாம்.

9-ஆம் இடத்தில் உள்ள ராகு ஆன்மிக ஞானத்தையும், அருள்வாக்கு சொல்லும் சக்தியையும் உண்டாகும் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அங்கு சனியும் இருப்பதால் அந்த நிலையை அடைந்த பிறகு அந்த சாதனையாளர்கள் குருவை மறக்காமலும், ஆணவத்துக்கு அடிமையாகாமலும் இருந்தால்தான் கடைசி வரை அருள்வாக்கு    பலிக்கும்; மரியாதையும் காப்பாற்றப்படும். புராணகாலத்தில் அசுரர்கள் கடும் தவமிருந்து வரங்களைப் பெறுவார்கள். வரங்களைப் பெற்றபிறகு காமக் குரோத வழிகளில் ஈடுபட்டு, ஆணவத்தோடு ஆடாத ஆட்டம் போட்டு, முடிவில் அழிவைத் தேடிக் கொள்வார்கள். இந்தக் காலத்தில் அரசியல்வாதிகள் சாமர்த்தியமாகப் பேசி அல்லது வோட்டுக்கு பணம் கொடுத்து, இலவச சலுகைகளை அறிவித்து, மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் மக்களை மறந்துவிடுவார்கள்.  ஊழல் செய்து கோடி கோடியாகக் குவிப்பார்கள். அதேபோல சில ஆன்மிக வாதிகளும் தங்களுடைய தவப்பலனை தவறாகப் பயன்படுத்தி, பெண்கள் வகையில் அவப்பெயர் எடுத்துக் கொள்கிறார்கள். சிறை செல்லுவதும் வழக்குகளை சந்திப்பதும் அவர்களுக்கு கேவலமாகத் தெரியாது. 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், "கழுவின மீனில் நழுவின மீனாக' எப்படியோ தப்பி பிழைப்பை ஓட்டலாம்.

9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஒரு சிலருக்கு ஆன்மிகப் பணியில் ஈடுபாடு உண்டாகும். டிரஸ்ட், கமிட்டியில் பதவி கிடைக்கும். சனி, ராகு இருப்பதால் இந்தத் துறையில் உங்களை ஈடுபத்தியவர் சுயநலவாதியாக மாறி உங்களை கூட்டுச் சேர்க்க விரும்பலாம். அவர்கள் விரித்த வலையில் நீங்கள் சிக்காமல் தெய்வத்துக்கும் மனசாட்சிக்கும் பயந்து நடப்பதால், மற்றவர்கள் அசல் எது போலி  எது என்று தெரிந்துகொண்டு, போலியை ஒதுக்கிவிட்டு அசலைப் போற்றி ஆதரவு தந்து ஏற்றுக்கொள்வார்கள். அது குரு பார்த்த பெருமை!

பெண்கள் ஜாதகத்தில் 9-ஆம் இடம் புத்திர ஸ்தானம்; 5-ஆம் இடம் கர்ப்ப ஸ்தானம். ஆண்கள் ஜாதகத்தில் 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். இங்கு 5-ல் புத்திர ஸ்தானத்தில் புத்திர காரகன் குரு நிற்பது புத்திர தோஷம். "காரகோ பாவகநாசம்' எனப்படும். அதாவது பிதுர்ஸ்தானத்தில் 9-ல்  பிதுர்காரகன் சூரியன் நிற்பது பிதுர்தோஷம். களஸ்திர ஸ்தானத்தில் 7-ல் களஸ்திரகாரகன் சுக்கிரன் நிற்பது  களஸ்திரதோஷம். சகோதர ஸ்தானத்தில் 3-ல் சகோதர காரகன் நிற்பது செவ்வாய் சகோதர தோஷம். தாயார் ஸ்தானத்தில் 4-ல் தாய் காரகன் சந்திரன் இருப்பது மாத்ரு தோஷம். இதில் விதிவிலக்கு சனிக்கு மட்டும்தான். ஆயுள் காரகன் சனி ஆயுஸ்தானம் 8-ல் இருக்கலாம். ஆயுள் விருத்தி; ஆயுள் தோஷம் ஆகாது. ஆகவே 5-ல் குரு; 9-ல் சனி, ராகு நிற்பது புத்திர தோஷம் என்பதால் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், வாஞ்சாகல்ப கணபதி புத்திரப்ராப்தி ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

குரு செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் சஞ்சரிப்பதால் இக்காலம் உங்களுக்கு அனுகூலமான பலன்களே நடக்கும். செவ்வாய் கும்ப ராசிக்கு 3, 10-க்குடையவர். 5-ல் நிற்கும் குரு உங்கள் ராசியையும், 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்ப்பதால் உங்களுக்கு தொழில் லாபம், தன லாபம், எதிர்பாராத அதிர்ஷ்டம், சகாயம், பழகியவர்கள், நண்பர்கள் மூலமாக ஆதாயம் உண்டாகும். நீண்ட நெடுங்காலமாக அதிர்ஷ்டத்தைத் தேடி அலைபவர்களுக்கு இக்கால கட்டத்தில் அது இஷ்டமாக வந்து அரவணைக்கும். ரியல் எஸ்ட்டேட் தொழில் செய்கிறவர்கள், எப்போதோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடங்கள் எல்லாம்- பைபாஸ் அருகிலும் நான்குவழிப் புறச்சாலை ஓரங்களிலும்  அமைவதால் அதிக விலைக்குப் போகும். பணத்தை அள்ளிக் குவிக்கலாம். அதற்காக நீங்கள் பூமிநாதர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையில், செவலூர் என்ற ஊரில் ஆரணவல்லி சமேத பூமிநாத சுவாமி கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழமையான கோவில். ஒவ்வொரு வாஸ்து காலங்களிலும் வாஸ்து ஹோமம், அபிஷேகம், பூஜை சிறப்பாக நடக்கும். பக்தர்களுக்கு காலை சிற்றுண்டியும் பகலில் அன்னதானமும் நடக்கும். சுவாமியின்மேல் செய்யும் அபிஷேகத் திரவியங்கள் எல்லாம் வெளியில் சிந்தாமல் லிங்கத் திருமேனி அடியில் ஆவுடையாருக்குள்ளேயே இறங்கிவிடும். சுவாமியாயைச் சுற்றி 16 பட்டைகளாக அமைந்துள்ளது.

கும்ப ராசிக்கு செவ்வாய் 3-க்குடையவர். இதுவரை உங்களைக்  கண்டுகொள்ளாமல் இருந்த உடன்பிறப்புகள், இப்போது உங்கள்மேல் பரிவும் பாசமும் கொண்டு கரிசனம் காட்டுவார்கள். "சாப்பிட்டீர்களா, தூங்கினீர்களா, எப்படியிருக்கிறீர்கள்' என்றெல் லாம் குசலம் விசாரிப்பார்கள். வலிய வந்து உங்கள்மேல் அக்கறை காட்டுவர்கள். அதற்கு ஏதாவது உள்காரணம் இருக்கும். அது ஆரம்பத்தில் தெரியாது. போகப் போகத் தெரியும். ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஏன் வருத்தப்பட்டது என்பது பின்னால்தான் தெரியும். 3-ல் கேது, ராகு, சனி சம்பந்தம் இருக்கிறதே! ஆதாயமில்லாத செட்டி ஆத்தோடு போவாரா என்பதுதான் நிலை. மற்றபடி பொதுவாக உங்களுக்கு எல்லா சௌகர்யங்களும் நடக்கும். நீங்களும் "தடியும் ஒடியக்கூடாது- பாம்பும் அடிபட வேண்டும்' என்ற பாலிசியை கடைப் பிடித்து கூடப்பிறந்தவர்களை சமாளியுங்கள்.

26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாக திருவாதிரையில் குரு சஞ்சாரம். பிறகு புனர்பூசத்தில் மாறி வக்ரம் அடைந்து, 26-1-2014 முதல் 13-4-2014 வரை மீண்டும் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்ரகதியாக குரு சஞ்சாரம் செய்வார். ராகு நிற்கும் இடம் என்பதால் இரண்டுகட்ட நிலையிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். கெடுதலுக்கு இடமில்லை. பாக்கியம், அனுகூலம், தெய்வபக்தி, முன்னோர்கள் வழிபாடு ஆகிய நற்பலன்கள் நடக்கும். புனிதப்பயணம், தெய்வ ஸ்தல யாத்திரை, விரதங்களை மேற்கொள்வது போன்ற பலன்களைச் சந்திக்கலாம். இக்காலம் சிலர் ஜோதிட ஆராய்ச்சி செய்து பலன் சொல்லலாம். சிலர் மாந்திரீகப் பயிற்சி செய்வார்கள். சிலர் தியானம், யோகா என்று செயல் படுவார்கள். அப்படி ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு கற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், சென்னை அமரர் பி.எஸ்.பி. அவர்களின் யுனிவர்சல் ரிசர்ச் அகாடமியில் உறுப்பினராகி, ஜோதிட அறிமுக நூல் வாங்கிப் படிக்கலாம். பல ஆயிரக்கணக்கில் அந்தப் பேரவையில் மாணவர்கள்  இருக்கிறார்கள். சமீப காலமாக ஜோதிடம் வெகு வேகமாகப் பரவி வருகிறது. ஒரு காலத்தில் வள்ளுவர்களிடமும் அய்யங்கார்களிடமும் தான் ஜோதிடம் சிக்குண்டு கிடந்தது. இன்று ஆண்- பெண் எல்லா சமூகத்தாரும்- குறிப்பாக பட்டம் பெற்றவர்களும் ஜோதிட ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்கள். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், கோவை கற்பகம் யுனிவர்சிட்டி, தஞ்சை சாஸ்திரா யுனிவர்சிட்டி போன்ற இங்களில் எல்லாம் ஜோதிட வகுப்பு நடத்தி டிப்ளமோ கொடுக்கிறார்கள். இதுதவிர தனிப்பட்டோரும் ஜோதிடப் பயிற்சி வகுப்பு, மாந்திரீக வகுப்பு, யோக, தியான வகுப்பு என்று நடத்தி கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் மக்களி டையே ஜோதிடம் முக்கியத்துவம் அடைந்திருப்பதாக உணர முடிகிறது. சிலர் ஆராய்ச்சி அடிப்படையிலும், பலர் வருமானத்திற் காகவும், ஒருசிலர் புகழ் பெறுவதற்காகவும் இதில் ஈடுபடுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில், எனது ஜோதிட ஆய்வு மற்றவர்களைப் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்கு "பால ஜோதிடம்' ஒரு கருவியாக இருக்கிறது. அதைப் படித்தே பலர் எனக்கு மானசீக சீடர்களாக இருக்கிறார்கள் என்றால், அதற்காக எனது குருநாதர்கள் தெய்வத்திரு பள்ளத்தூர் அய்யாவுக்கும், தெய்வத்திரு கிருஷ்ணமூர்த்தி சாருக்கும், தெய்வத்திரு கோபாலய்யர் அவர்களுக்கும், மற்றும் "நக்கீரன்' ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறேன்.
ஜோதிடஞானம் சித்திக்கவும், வாக்கு பலிதம் மேன்மையடையவும் வெறும் படிப்பு மட்டும் போதாது. ஏதாவது ஒரு இஷ்ட தெய்வத்தின் உபாசனையும், அதற்குமேல் ஒழுக்கமும் அவசியம். அப்படியிருந்தால் கடைசி வரை ஜோதிடம் நம்மைக் காப்பாற்றும்; கைகொடுக்கும்.

புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம். இதில் இரண்டு கட்டமாக குரு சஞ்சாரம் செய்வார். 28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்டமாகவும்; 13-4-2014 முதல் 13-6-2014 வரை 2-ஆவது கட்டமாகவும் குரு சஞ்சாரம் செய்வார். குருவின் மொத்த சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். 2, 11-க்குடையவர் குரு 5-ல் இருக்கிறார். கும்ப ராசிக்கு 9-ஆம் இடம், 11-ஆம் இடம், ஜென்ம ராசியைப் பார்ப்பதால் நன்மை, லாபம், பாக்கியம், திட்டங்களில் வெற்றி ஆகிய எல்லா நன்மைகளையும் யோகங்களையும் அடையலாம்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

இக்காலம் உங்களுக்கு வேதனையும் சோதனையும் நிரம்பியதாக இருக்கும். எந்த ஒரு கிரகமும் வக்ரத்தில் நல்லதோ கெட்டதோ செய்யும்- அதன் தன்மையைப் பொறுத்து. ஆனால் அஸ்தமனத்தில் கெடுதலே செய்யும். அஸ்தமனம் என்றால் இருட்டு. இருட்டில் எதைப் பார்க்க முடியும்? அதனால் நல்ல இடங்களில் நிற்கும் கிரகம் அஸ்தனமத்தில் கெடுதலையே செய்யும். கெட்ட இடங்களில் நிற்கும் கிரகம் அதிகமாக கெடுதலையே செய்யும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங் களில் அந்தக் கெடுதல்களைத் தாங்கிக் கொள்வதற்கு மனப்பக்குவம் தேவை. அதற்குப் பரிகாரம் தேவை. சித்தர்களின் ஜீவசமாதி சென்று வழிபட்டால் நமக்கு அந்த மனப்பக்குவம் கிடைக்கும். திருவண்ணா மலையைச் சுற்றி மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதிகள் நிறைய உண்டு. ரமணர், சேஷாத்திரி சுவாமி, விசிறி சாமியார் போன்ற பல சித்தர், மகான்கள் ஜீவசமாதி உள்ளன. அங்கு சென்று ஆறுதல் பெறலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

குருவின் வக்ர கதியில் எல்லாம் நல்லதாகவே நடக்கும். உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். நீண்ட நாள் முயற்சிகள் கைகூடும். வரவேண்டிய பணங்கள் வந்து சேரும். லாபங்கள் பெருகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மக்களால் அனுகூலம் ஏற்படும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு தொழில் மேன்மை, பொருளாதார முன்னேற்றம், சகோதர சுகாயம் உண்டாகும். சச்சரவுகள் நீங்கும். புதிய முயற்சிகள் கைகூடும். சிலருக்கு இடப்பெயர்சசி ஏற்படும்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியால் மக்கள் வகையில் மனக்குழப்பமும் வேதனையும் ஏற்பட்டு விலகும். தந்தைக்கும் மகனுக்கும் கௌரவப் பிரச்சினையால் சிறுசிறு தகராறுகள் உண்டாகி மறையும். முடிவில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துப் போவதால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். தராசு ஒரு பக்கம் ஏறினால் இன்னொரு பக்கம் இறங்குவது போல, ஒரு பக்கம் கெடுக்கும் கிரகம் இன்னொரு பக்கம் நன்மையைக் கொடுக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியால் தனலாபம், வெற்றி, மனமகிழ்ச்சி, வழக்குகளில் வெற்றி ஏற்படும். மக்கள் வகையில் சுபமங்கள நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளைப் பேறு இல்லாவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிட்டும்.

மகர ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)


இதுவரை 5-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 6-ஆம் இடமான மிதுனத்திற்கு மாறியிருக்கிறார்.

பொதுவாக 3, 6, 8, 12-ஆம் இடங்கள் குருவுக்கு துர்ப்பலன்களைத் தரக்கூடிய இடங்கள். "சத்தியமாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்' என்பது பாடல். ஜோதிடர்களும் ஜோதிடப் பத்திரிகை களும் மேஷ ராசிக்கும், கடக ராசிக்கும், விருச்சிக ராசிக்கும், மகர ராசிக்கும் குருப்பெயர்ச்சிப் பலன்கள் சாதகமில்லையென்றே எழுதி பயமுறுத்துவார்கள். அவர்கள் சொல்லுவதும் எழுதுவதும் தவறில்லை. "தானப்பா ஆறுக்கு தோஷமுண்டு தார்வேந்தர் பகையுண்டு ரோக முண்டு' என்று ஆறாம் இடத்து குரு பலனை புலிப்பாணி விளக்குகிறார். என்றாலும் கடந்தகால குரு ஐந்தில் நின்றபோது என்னென்ன யோகம் செய்தார் என்பதைப் பொறுத்தே 5-ஆம் இடத்துப் பலனை நிர்ணயிக்க வேண்டும்.

மகர ராசிக்கு 3, 12-க்குடைய குரு பாப ஆதிபத்தியம் பெற்ற கிரகம். அவர் 6-ல் மறைவதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற அடிப்படையில் நன்மைகள் நடக்குமென்று எதிர்பார்க்கலாம்.

6-ஆம் இடம் என்பது கடன், வியாதி, வைத்தியச் செலவு, எதிரி, போட்டி, பொறாமை ஆகியவற்றைக் குறிக்கும். இதில் குரு நிற்பதால் இவற்றை அதிகமாக்குவார் என்பதுதான் பலன்.

அப்படி வரும் கடன் நல்லதற்காக அமைந்தால் அதை ஏன் கெடுதல் என்று சொல்லவேண்டும். எதிரியும், போட்டி, பொறாமையும் இருந்தால்தான் நீங்கள் விழிப்போடு செயல்படுவீர்கள். இல்லா விட்டால் சக்திக்கு குறைந்த சாமான்யராகி விடுவீர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது.

மிதுன குரு 5-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

10-ஆம் இடம் துலாம். அதற்குத் திரிகோணத்தில் நின்று குரு 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அதனால் கடந்த காலத்தில் வேலை தேடி செய்த தீவிர முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கும். அப்போது ஆரம்பித்த வியாபாரம் இப்போது லாபகரமாக சூடு பிடிக்கலாம். அன்று தச்சு செய்த கட்டடம் இன்று பூர்த்தியடையலாம்; கிரகப் பிரவேசம் நடக்கலாம்.

தொழில் ஸ்தானமான துலா ராசிக்கு 3, 6-க்குடையவர் குரு. 6-ஆம் இடம் என்பது கடன் ஸ்தானம். அதனால் தொழில் முயற்சி, வேலை வாய்ப்பு, கட்டட காரியங்களுக்காக குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம். நீண்டகாலத் தவணைக் கடன், வங்கிக் கடன் கிடைக்கும். அல்லது ஹவுசிங் சொஸைட்டி, எல்.ஐ.சி போன்ற நிதி நிறுவனங்களில் உதவி பெறலாம்.

குரு 2-ஆம் இடமான தன ஸ்தானத்தைப் பார்ப்பதால், தனவிருத்தியும் சம்பாத்தியமும் குறையாமல் இருக்கும். அதிலும் தன ஸ்தானாதிபதி குரு தன ஸ்தானத்தையே பார்ப்பது சிறப்பு. எனவே சம்பாத்திய வரவாக இருந்தாலும் சரி; லாப வரவாக இருந்தாலும் சரி; கடன் வரவாக இருந்தாலும் சரி- வரவுக்குப் பஞ்சமிருக்காது. கடந்த நாலைந்து வருட காலமாகவே மகர ராசிக்காரர்களுக்கு மற்ற எல்லா வசதிகளும் சௌகர்யங்களும் நடந்த போதிலும், தேவைக்கேற்ற சரளமான பணப்புழக்கம் இல்லை. அதற்கான அளவுக்கு நிலையான தொழில், நிரந்தர வருமானம் அமையவில்லை. அப்போதைக்கப்போது அந்தந்த தேவைகள் எப்படியோ ஓடியடைந்தது.

ஒரு அன்பர் குடும்பத்தில் மனைவி, மக்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. வியாபாரத்திலும் கடன், வட்டி தொல்லையால் பாதிக்கப்பட்டு கவலை. என்றாலும் ஒரு கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். பெரிய ஹோமமும் நடத்திவிட்டார். பொதுக் காரியம் செயல்பட்டது; புகழ் கிடைத்தது; புண்ணியம் சேர்ந்தது. வீட்டில்தான் நிம்மதியில்லை. அப்படிப்பட்டவர்களுக் கெல்லாம் இந்த 6-ஆமிடத்து குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் தன் சொந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவது உறுதி.

எனவே, குரு இருக்கும் இடத்தைப் பற்றி பயப்படாமல்- கவலைப் படாமல் அவர் பார்வை பட்ட இடங்களின் பயனையும் பலன்களையும் ஆராய்ச்சி செய்தால் அனுகூலமாகத் தரும்.

12-ஆம் இடத்தை 12-க்குடைய குருவே பார்ப்பதால் விரயங்கள், செலவுகள் வந்தாலும் அவை பயனுள்ள செலவாகவும் நன்மையான விரயங்களாகவும் இருக்கும். வியாபாரிகள் தொழில் துறையில் புதிய முதலீடுகளைச் செய்து தொழிலைப் பெருக்கலாம். வியாபாரம் கூடுதலாக இருந்தாலும், சனியும் ராகுவும் 12-ஐப் பார்ப்பதால் சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலர் அரசு வேலை வாங்குவதற்காக அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வேலை தாமதமாவ தால் நம்பிக்கை தளரும். குரு பார்வையால் தாமதமானாலும் பணம் கிடைக்கும். 4-ஆம் இடத்தை சனியும் ராகுவும் பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான செலவுகளும் ஏற்படும். சனி, ராகு- கேது தசாபுக்திகள் நடப்பவர்கள் கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். இடத்து சம்பந்தமான பிரச்சினைகளை சந்திப்பவர்கள் விருத்தாசலம் அருகில் ஸ்ரீ முஷ்ணம் சென்று பூவராக சுவாமியை வழிபட வேண்டும்.

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு 10-ல் சனி, ராகு நிற்பதால் பதவி உயர்வும் விரும்பிய இடப்பெயர்ச்சியும் தாமதமாகும். வேலைப் பளு அதிகமாகும். அதற்கான பாராட்டும் பதவி உயர்வும் தாமதமாகும். தொழில்காரகன் சனி என்பதால், திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபடலாம். அல்லது தேனி சின்னமனூர் அருகே குச்சனூர் சென்று வழிபடலாம். குச்சனூர் அருகில் வடகுரு ஸ்தலம் இருக்கிறது. அங்கும் சென்று வழிபடலாம். தென்காசிப் பாதையில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சென்று ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை வழிபடவும். சேலம் நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தகிரி முருகன் கோவிலில் (சாமியார் கரடு ஸ்டாப்) வழிபடலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் 4, 11-க்குடையவர். இந்த ஒருமாத காலமும் உங்களுக்கு அனுகூல காலமாகவே அமையும். உடலில் ஆரோக்கியமும் திடகாத்திரமும் இருக்கும். பூமி, வீடு, மனை, வாகனம் சம்பந்தமான நற்பலனை எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். கெமிக்கல் அல்லது சிவப்பு நிறப்பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறவர்களுக்கும் ஆதாயமான நேரம்.

 26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாகவும்; 26-1-2014 முதல் 13-4-2014 வரை இரண்டாம் கட்டமாகவும் ராகுவின் சாரத்தில் திருவாதிரையில் குரு சஞ்சாரம் செய்வார். ராகு ராசிநாதனோடு சேர்ந்து 10-ல் இருக்கிறார். ராசிநாதன் சனி உச்சமாக இருக்கிறார். எனவே தொழில், வியாபாரம், வாழ்க்கை எல்லாவற்றிலும் அற்புதமான பலன்களை எதிர்பார்க்கலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலையில் திருப்தி ஆகிய மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலதிபர்களுக்கு புதிய கூட்டு, புதிய முயற்சிகள், வெற்றி வாய்ப்புகள், சந்தோஷம் உண்டாகும்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்டமாகவும்; 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாம் கட்டமாகவும் புனர்பூசத்தில் குரு சஞ்சாரம் செய்வார். புனர்பூசம் குருவினுடைய சொந்த நட்சத்திரம். 12-க்குடையவர் 6-ல் இருக்கிறார். முதல்கட்டத்தில் நற்பலன்கள் நடந்தால், இரண்டாம் கட்டத்தில் எதிர்மறைப் பலன்களாக நடக்கும். 6-ஆம் இடம் போட்டி, பொறாமை, எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலன்களும்; வீண் விரயம், எதிர்பாராத இழப்பு, ஏமாற்றம் ஆகிய பலன்களும் ஒரு கட்டத்தில் நடைபெறும். இன்னொரு கட்டத்தில் தைரியம், எதிர்பாராத உதவி, சகாயம், சுப முதலீடு, வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகிய பலன்களையும் சந்திக்கலாம். தேவூர் என்ற ஊர் குபேரன் வழிபட்ட ஸ்தலம். குருவுக்கு பதவிகிடைத்த ஸ்தலம். கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் எஸ். புதூர் வழியில் உள்ளது. அங்கு சென்று வழிபடலாம்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

மகர ராசிக்கு குரு 3, 12-க்குடையவர். அவர் 6-ல் அஸ்தமனமடைவது நல்லது. எதிரி, கடன், விவகாரம் எல்லாம் மாறி உங்களுக்கு அனுகூலமாக அமையும். “"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்றபடி, 12-க்குடைய குரு 6-ல் இருப்பது உங்களுக்கு அனுகூலம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

மகர ராசிக்கு 12-க்குடைய குரு வக்ரமடைகிறார். வக்ரத்தில் உக்ர பலம். குரு இயற்கையில் சுப கிரகமாகும். ஆனால் அவர் 6-ஆமிடத்தில் வக்ரமடைவதால், 6-ஆம் இடத்திற்குரிய பலன்கள் அதிகம் செயல்படும். ரோகம், ருணம், சத்ரு- அதாவது வியாதி, கடன், எதிரி போன்றவை வலுவாக இருக்கும். அதனால் சில தொல்லைகளை சந்திக்க நேரும். ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் எல்லாவற்றையும் எளிதாக சமாளிக்கலாம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:

உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் உங்கள் ராசிக்கு 8-க்குடையவர். குருவும் 6-ல் இருப்பதால் உங்கள் முயற்சிகளில் குறுக்கீடுகளும் தடைகளும் இருக்கத்தான் செய்யும். அந்த மாதிரி சந்தர்ப்பத்தில் மாயவரம் பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை வழிபடவும். சூரியனுக்கு முக்கியமான இடம்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு:

திருவோணம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் 7-க்குடையவர். திருமணத் தடை விலகும். கணவன்- மனைவி ஒற்றுமை உண்டாகும். சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகில் சசிவர்ணேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். சந்திரன் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:

அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் 4, 11-க்குடையவர். வீடு, மனை லாபமும்  செய்தொழில் லாபமும் உண்டாகும். இது சம்பந்தமான சுபக்கடன்கள் வாங்கலாம். தாயின் ஆரோக்கியம் முன்னேற்றம் பெறும். தாய்வழிச் சொத்துகள் லாபகரமாக பலன் தரும். சில சொத்துகள் பரிவர்த்தனையாகும். மூத்த சகோதர வகையில் ஆதரவும் அனுகூலமும் உண்டாகும். சிவகங்கை அருகில் நாட்டரசன் கோட்டை சென்று கண்ணாத்தாளை வழிபடவும்.

தனுசு ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

 (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)


இதுவரை 6-ஆம் இடத்திலிருந்த குரு இப்பொழுது 7-ஆமிடமான மிதுனத்திற்கு வந்து, உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கிறார்.

குருவுக்கு யோகமான இடங்கள் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான். இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் ராஜயோகத்தையும் நன்மைகளையும் அடையப் போகும் ராசிகள் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை. இந்த ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலி.

கடந்த காலத்தில் 6-ல் இருந்த குரு உங்களில் பலரை கடன் காரராக்கி, "அவரா- வாங்கியதைத் திருப்பித் தரவே மாட்டாரே' என்று விமர்சனம் செய்ய வைத்து, "கொடாக்கண்டன்' என்ற முத்திரையைக் குத்திவிட்டது.

ஒருவரிடம் சரக்கு வாங்கி விற்று, அந்தப் பணத்தை வேறு ஒருவரின் கடனை அடைக்கச்செய்து, அவரிடம் வாங்கிய சரக்கை காசாக்கி முதல் நபருக்குக் கொடுத்துவிட்டு, மூன்றாவது புது நபரிடம் சரக் காகவோ ரொக்கமாகவோ வாங்கி இரண்டாவது நபருக்கு கொடுத்து, இப்படியே கடந்த பல வருடங்களாக கை முதலீடும் இல்லாமல் கணிசமான லாபமும் இல்லாமல் காலத்தை ஓட்டி வந்துவிட்டீர்கள். தனிமையில் இருந்து இதைச் சிந்திக்கும்போது உங்களுக்கே வெறுப் பாகவும் இருக்கிறது; வேதனையாகவும் இருக்கிறது. இது என்ன பிழைப்பு என்று சலிப்படைய வைக்கிறது.

இந்த குருப்பெயர்ச்சி இதற்கெல்லாம் மாற்று மருந்தாகி, உங்களுக்கு சத்து டானிக் கொடுத்து உற்சாகம் ஊட்டப்போகிறது.

7-ஆம் இடம் மனைவி, உபதொழில், திருமணம் போன்றவற்றைக் குறிக்கும் இடம். இதுவரை 35 வயதுக்குமேலாகி திருமணமாகாத ஆண்களுக்கும், 30 வயதுக்குமேலாகி திருமணமாகாத பெண்களுக்கும் இனி உடனடியாக கல்யாணம் கைகூடி வரும். நாற்பது நாற்பத்தைந்து வயதாகியும் நிலையான தொழிலோ நிரந்தர வருமானமோ இல்லாமல் அல்லல்பட்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நிலையான தொழிலுக்கும் நிரந்தரமான வருமானத்துக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். திருமணமாகி பதினாறு ஆண்டுகளாக குழந்தையே இல்லாதவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வம்சம் தழைக்க வாரிசைக் கொடுக்கும்.

மிதுன குரு 5-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும்; 9-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

11-ஆம் இடம் என்பது லாப ஸ்தானம், வெற்றி- ஜெய ஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், உபய களஸ்திர ஸ்தானம். இதற்கு குருபார்வை அனுகூலப் பார்வையாக அமைவதால் தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத லாபம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோஷன், ஊதிய உயர்வு கிடைக்கும். யோகமான தசாபுக்தி நடந்தால் விசேஷ வெகுமதி, போனஸ் கிடைக்கும்.

சுக்கிர தசாபுக்தி நடந்து ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானம் பலக் குறைவாக இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும் அல்லது சின்ன வீடு செட்டப்பில் சிலர் மாட்டிக் கொள்ளலாம். இதெல்லாம் விட்டகுறை தொட்டகுறை சமாச்சாரம். ஆசையும் நினைப்பும் சபலமும் இருப்பவர்களுக் கெல்லாம் அது நிறைவேறாது; அதற் கெல்லாம் ஒரு மச்சம் வேண்டும்.

செவ்வாய் தசாபுக்தி அல்லது ராகு தசாபுக்தி நடந்தால் மூத்த சகோதர- சகோதரி வகையில் பிரச்சினைகளையும் பகை, வருத்தங் களையும் சந்திக்கக் கூடும்.

குரு, சந்திர தசாபுக்தி நடந்தால் சகோதர வழி சகாயம், உதவி, அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்குப் பிரச்சினை இல்லை. பிரச்சினை உடையவர்கள் குலசாமி கோவிலுக்கும், பழனி அல்லது குருவாயூருக்கும் சென்று பிரார்த்தனை செய்துகொள்ளலாம். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். கௌரவம், மதிப்பு, மரியாதை உயரும். பொதுநலம், அரசியல், கட்சி ஈடுபாடு உடையவர்களுக்கு பட்டம் பதவிகள் தேடிவரும். சிலர் அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறுவதன் மூலம் தன் எதிர்காலத்தை அதிர்ஷ்ட மாக்கிக் கொள்ளலாம்.

இராவணன் சீதையை சிறையெடுத்தது அதர்மம் என்று, விபீஷணன் அண்ணனை விட்டு விலகி பகைவனாகிய ராமனோடு போய் சேர்ந்தான். இராவணனும் அவனுடைய ஆட்களும் விபீஷணனை பங்காளி துரோகி என்று ஏசினார்கள். ஆனால் ராமனோ அவனுக்கு மகுடம் சூட்டி விபீஷண ஆழ்வார் பட்டத்துக்கு தகுதியுடையவனாக பெருமை சேர்த்துவிட்டார். ஆக, கட்சி மாறுவது என்பது ராமாயண காலத்திலேயே இருக்கிறது. ஒரு கட்சியில் உள்ளவர்களை தவறாக விமர்சித்துப் பேசியவர்களே, கட்சி மாறி  அவர்களிடமே சேர்ந்து பொன்னாடை போர்த்தி பாராட்டுவதுதானே இன்றைய அரசியல்.

3-ஆம் இடம் குடும்பம், சகோதர, சகாய, தைர்ய, வீர்ய, போக ஸ்தானம். அதை குரு பார்க்கிறார். அந்த வீட்டுக்குடையவர் சனி. அவர் ராகுவோடு சம்பந்தம். அவரை குரு பார்க்கிறார். "குரு பார்க்கக் கோடி குற்றம் நீங்கும்' என்பதால், சனி, ராகுவின் தோஷம் குறையும். சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் இருந்த சச்சரவுகளும் பிரச்சினை களும் விலகும். பங்காளிப் பகை விவகாரம் தீரும். அந்நியர்களின் விரோதமும் மாறும்.  3-க்குடையவர் 3-ஆம் இடத்திற்கு திரி கோணத்தில் நிற்பதாலும், 3-ஆம் இடத்திற்கு 2, 11-க்குடைய குரு பார்வையைப் பெறுவதாலும் எதிர்காலத்தின்மேல் பிடிப்பும் நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டு உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் மனதிலும் வைராக்கியமும் தைரியமும் உருவாகும். நீங்கள் ஒரு செல்வாக்கான ஸ்தானத்துக்கு வந்தால் தங்களுக்கு நல்லது என்ற சுயநலத்தோடு, உங்களைச் சார்ந்தவர்களும் வேண்டியவர்களும் உங்களுக்கு சரீர உதவியும் பண உதவியும் செய்யலாம். ஒருவரைச் சார்ந்து இன்னொருவருக்கு ஆதாயம். நெய்க்கு தொன்னை ஆதாரம்- தொன்னைக்கு நெய் ஆதாரம் என்பது போல! "எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன்' என்பது ஒரு பாலிசி. நல்ல நேரம் இருந்தால் அப்படிப்பட்ட புது நட்பும் புது உறவும் தேடிவரும். இல்லாவிட்டால் ஏறியதும் ஏணியை எட்டி உதைத்துத் தள்ளுபவர்களும் உண்டு.

11-ஆம் இடத்தில் சனி, ராகு நிற்பது சிலருக்கு உபய களஸ்திர பாக்கியத்தை உண்டாக்கும். (மறுமணம்).  விதவைத் திருமணம் அல்லது அவர்களால் லாபம் உண்டாகும். அவர்கள் பெயரில் தொழில் முதலீடும் உதவியும் கிடைக்கும்.

தனுசு ராசிக்கு 5-ஆம் இடத்திற்கு சனி, ராகு- கேது சம்பந்தம் ஏற்படுவதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உங்கள் பிள்ளைகளில் (ஆணோ- பெண்ணோ) யாராவது ஒருவர் காதல் வயப்படலாம். கலப்புத் திருமணம் செய்துகொள்ளலாம். அதுபோல இருந்தால் காமோகர்ஷண ஹோமம் செய்து அவர்கள் மனதை மாற்றலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம். அது செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 12-க்குடையவர். மக்கள் வகையில் சுப சோபன செலவுகள் ஏற்படும். சுபமுதலீடு செய்யலாம். உடன்பிறந்தவர்களுக்கும் உங்கள் தலைமையில் நல்ல காரியங்கள் நடக்கும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் அவர்கள் வகையில் தேவையற்ற விரயங்களும் மன சஞ்சலங்களும் கௌரவப் பிரச்சினைகளும் உண்டாகும். அதன் பாதிப்பு விலக புதுக்கோட்டை அருகில் குமரமலை சென்று பால தண்டாயுத பாணியை வழிபடவும். அர்ச்சகர் ராமுகுருக்கள்; செல்: 98424 83217-ல் தொடர்பு கொள்ளலாம்.

திருவாதிரை ராகு நட்சத்திரம். இதில் இரண்டு கட்டமாக குரு சஞ்சரிப்பார். 26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாக சஞ்சரிப்பார். இக்காலம் அனுகூலமாகவும் லாபகரமாகவும் எந்த முயற்சியிலும் வெற்றியாகவும் அமையும். 26-1-2014 முதல் 13-4-2014 வரை திருவாதிரையில் வக்ரகதியாக இரண்டாவது கட்டமாகச் செயல் படுவார். இக்காலம் முதல்கட்டத்தில் நடந்த நற்பலனுக்கு எதிர்மறைப் பலனாக செயல்படும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரும். டென்ஷன், கவலை, செலவுகள் ஏற்படும்.

கோவை- கோவில் பாளையம் காலகாளேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்டமாகவும், 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாவது கட்டமாகவும் புனர்பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்கிறார். புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம். எனவே இரண்டு கட்டத்திலும் குரு ராசிநாதன் என்பதால், உங்களுக்கு நன்மைகளே உண்டாகும். முதல் கட்டத்தில் ஆப்பிளை கடித்துச் சாப்பிடுவதுபோல, இரண்டாவது கட்டத்தில் ஆப்பிளை ஜுஸாக்கிக் குடிப்பதுபோல! மொத்தத்தில் குருப்பெயர்ச்சி நன்மை தான். திருவள்ளூரிலிருந்து திருத்தணி போகும் பாதையில் ஆற்காடு குப்பம் என்ற பகுதியில் சித்தர் அனுமந்தசாமி ஜீவசமாதியும், அருகில் அவருடைய சீடர் ஜெயராம் சுவாமிகள் ஜீவசமாதியும் இருக்கிறது. சென்று வழிபட்டால் குருவருள் பரிபூரணமாகி மனநிறைவைத் தரும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

தனுசு ராசி அதிபதி குரு. ராசிநாதன் குரு அஸ்தமனமடைவது ஆகாது. அஸ்தமனமென்றால் இருட்டு. ஆகவே உங்கள் காரியங்கள், முயற்சிகள் அனைத்திலும் தடை, தாமதம், குறுக்கீடு உண்டாகும். பூமி, வீடு, வாகனத்துக்கும் குரு அதிபதியாவார். எனவே சிலருக்கு இடப் பிரச்சினை, வாகன வகையில் செலவு, ஆரோக்கியக் குறைவு ஆகிய பலன்களை சந்திக்க நேரும். சிலர் வீடு மாறலாம் அல்லது இடப்பெயர்ச்சி வரலாம். இக்காலம் திருக்கண்டியூர் சென்று வழிபட்டால் சிக்கல்கள் விலகும். மலைபோல வந்த துயரங்கள் பனிபோல மறையும்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

குரு வக்ரமாக இருக்கும் இக்காலகட்டத்தில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு சொந்தவீடு அமையும். இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போருக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் அமையும். ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில், கொடுக்கல்- வாங்கல், சீட்டு கம்பெனி  நடத்துகிறவர்களுக்கு இக்காலம் அற்புதகாலம். லாபமும் யோகமும் உண்டாகும் காலம். சிலருக்கு கௌரவப் பதவி; லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், சமூக நற்பணி மன்றம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பாராட்டும் புகழும் வந்துசேரும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சிப் பலன்- முற்பகுதியில் வரவுகள் மிகுந்தும் பிற்பகுதியில் செலவுகள் மிகுந்தும் காணப்படும். இது கரும்பின் அடிப்பாகத்தில் இருந்து நுனி பாகத்தை நோக்கி சாப்பிடுவதைப் போல!

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சிப் பலன்- ஆரம்பத்தில் சிரமமும் சிக்கலும் இருந்தாலும், போகப் போக அனுகூலமும் நன்மைகளுமாக அமையும். இது கரும்பை நுனி பாகத்திலிருந்து அடிபாகம் நோக்கி சாப்பிடுவதுபோல!

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சி முழுவதும் நன்மையும் யோகமும் உடையதாக அமையும். எல்லா முயற்சிகளிலும் எளிதாக வெற்றியும் சிறப்பும் உண்டாகும். இது கரும்பை சாறு பிழிந்து குடிப்பதுபோல!

விருச்சிக ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

 விருச்சிகம்(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

இதுவரை 7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார்.

"இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும்' என்பது ஜோதிடப் பாடல். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலம் இல்லாத இடத்தில் வந்திருக்கிறது எனலாம். எல்லா ஜோதிடர்களும் பத்திரிகைகளும் உங்களை பயமுறுத்தி பலன் எழுதுவார்கள்.

விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடைய குரு 8-ல் மறைவது குற்றம்தான். குடும்பக் குழப்பம், பொருளாதாரச் சிக்கல், வரவுக்குமேல் செலவு, தேவையற்ற கடன் தொல்லை, அதனால் தொழிலைக் கவனிக்க முடியாதபடி பிரச்சினை, மக்கள் வகையிலும் பிரச்சினை, பிள்ளை களினால் தொல்லை, இருக்கும் தொழிலை சரிவர நடத்த முடியாமல் தடுமாற்றம், புதிய தொழில் சிந்தனை உருவெடுத்தும் அதை முறையாகச் செயல்படுத்த முடியாத சிக்கல் ஆகிய பலன்களைத் தரும்.

தசாபுக்தி மோசமாக இருப்பவர்களுக்கு அரசு தண்டனை, சிறைவாசம், மனசங்கடம், விபத்து, கௌரவப் பிரச்சினை, வைத்திய செலவு, துன்பம் போன்றவற்றைத் தரும்.

ஏற்கெனவே குரு விருச்சிக ராசிக்கு 7-ல் இருந்தபோது, எக்கச்சக்க மாக கடனை வாங்கி "தாட்டு பூட்டு தஞ்சாவூரு' என்று செலவு செய்த ஒருசிலர், இப்போது குரு 8-ல் வந்தபிறகு வட்டியும் கட்டாமல் அசலுக்கும் வழிவகை இல்லாமல் ஊரைவிட்டு ஓடுவதா அல்லது மஞ்சள் கடிதம் கொடுப்பதா என்று தடுமாற வைக்கும்.

விருச்சிக ராசிக்கு 2011 கடைசியில் ஏழரைச் சனி வந்தது. சனிக்கு 8-ல் குரு அமர்ந்து (ரிஷபத்தில் குரு) ஜென்ம ராசியைப் பார்த்தாலும் நல்லது நடக்கவில்லை. இப்போது குரு மிதுனத்தில் (விருச்சிக ராசிக்கு 8-ல்) இருந்தாலும், சனியையும் ராகுவையும் பார்ப்பதால் சோதனை களைச் சந்தித்து சாதனைகளைச் செய்யவேண்டும். குரு 6, 8, 12-ல் மறைவாக இருந்தால் குருவருள் மறைகிறது. குருவருள் கிடைக் காததால் திருவருளும் கிடைக்காமல் போகும். அதற்கு உதாரணம் கர்ணன்தான்.

பரசுராமரிடம் கர்ணன் மாறுவேடம்- பொய்வேடம் போட்டுக் கொண்டு சென்று வில் வித்தைகளைக் கற்றுக் கொள்கிறான். பரசுராமருக்கு உண்மை தெரிந்தவுடன் "சரியான சமயத்தில் நீ கற்ற வித்தைகள் எல்லாம் உனக்கு மறந்து போகும்' என்று சாபம் கொடுத்து விட்டார். அதேமாதிரி, அர்ஜுனனும் கர்ணனும் குருஷேத்திரப் போரில் நேருக்குநேர் மோதிக் கொள்ளும்போது கிருஷ்ணரின் திட்டத்தால் கர்ணன் ஒருமுறைக்குமேல் நாகாஸ்திரத்தைப் பயன்படுத்த முடியாமல் போகிறது. அர்ஜுனன் காப்பாற்றப்படுகிறான். அடுத்து பரசுராமரிடம் கற்ற வித்தையைப் பயன்படுத்தி அர்ஜுனனைப் பழிவாங்க கர்ணன் முயற்சிக்கிறான். ஆனால் குருவின் சாபத்தால் கர்ணனுக்கு மந்திரம் எல்லாம் மறந்துபோகிறது.

எனவே குரு 8-ல் மறையும் இக்காலம், உங்கள் மந்திர வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் பலமிழந்து பயனற்றுப் போகலாம். உங்கள் குலதெய்வம், இஷ்டதெய்வம் எல்லாம் பேசும் சக்தியற்று சிலையாகவே இருக்கலாம். இதற்கு பிராயச்சித்தமும் பரிகாரமும் தேடிக்கொள்வது அவசியம்!

இந்தக் காலத்தில் நிறைய பேருக்கு குலதெய்வத்தின் எல்லையும் இருப்பிடமும் தெரியாமலேயே இருக்கிறது. முன்னோர்களும் சொல்லாமலே போய்விடுகிறார்கள். தப்பித் தவறி குலதெய்வம் இருக்கும் இடம் தெரிந்தாலும், அதைப் பங்காளிகள்கூடி முறைப்படி வழிபாடு செய்யாமல் மூடிக்கிடக்கிறது.

குரு விருச்சிக ராசிக்கு 8-ல் நின்று 5-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

குருவுக்கு ஸ்தான பலனைவிட பார்வை பலனுக்கே பலம் அதிகம்! எனவே குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செலவு செய்ய வைப்பார். 2-ஆம் இடத்தைப் பார்த்த பலன் அதற்குண்டான வரவுக்கு வழி செய்வார். குறிப்புப் பேரேடு- பற்று வரவு கணக்குப் புத்தகத்தில் வரவு காலத்தில் கணக்கு வரவு வைத்தால்தான், பற்று காலத்தில் செலவு எழுதமுடியும். இது அக்கவுண்டன்சி பாலிசி...

எனவே உங்களுக்கு செலவழிக்க யோகம் இருக்கிறது என்றால் வரவுக்கும் யோகம் இருக்கும். வரவு வந்தால்தானே செலவு செய்ய முடியும்! சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! இதுதான் குரு 12-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதன் பலன்!

அந்த வரவு கடன் வரவாகவும் இருக்கலாம். ஆதாய வரவாகவும் அமையலாம். தனக்கு வரவேண்டிய பாக்கிசாக்கி வரவாகவும் இருக்கலாம். எப்படியோ ஒரு வகையில் வரவும் உண்டு; செலவும் உண்டு; மிச்சமில்லை!

குரு 4-ஆம் இடத்தைப் பார்த்த பலன் பூமி, வீடு, வாகன வகையிலும் சுபமுதலீடு செலவு உண்டாகும். அதற்காக கடன் வரவும் கிடைக்கும். சிலருக்கு தாய்வழிச் சொத்துகள் கிடைக்கும். அதை அப்படியே அனுபவிக்கலாம் அல்லது அதை விற்று பரிவர்த்தனை செய்து வேறு சொத்து வாங்கலாம். சிலர் தனக்கு ஏற்கெனவே இருக்கும் பழைய சொத்து அல்லது வாகனத்தை விற்று புதிய சொத்து அல்லது புதிய வாகனம் வாங்கலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். ராசிநாதன் செவ்வாய் 1, 6-க்குடையவர். 1-ஆம் இடத்திற்கு 8-லும், 6-ஆம் இடத்திற்கு 3-லும் மறைகிறார். செவ்வாய் 1, 6-க்குடையவர் என்பதால் போட்டி, பொறாமை, எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலன்களை எல்லாம் சந்திக்கும் காலம். அதனால் கவலையும் சஞ்சலமும் ஏற்படும். 6-ஆம் இடத்தை சனி, ராகு பார்ப்பதால், ஜாதகரீதியாக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் மற்றவர் களுக்கோ அறுவை சிகிச்சை, வைத்தியச் செலவு வரலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தன்வந்திரி ஸம்புடித ஆயுஷ் ஹோமம் செய்லாம். ஸ்ரீரங்கம், தாடிக்கொம்பு, கோவை தன்வந்திரி மருத்துவ நிலையம், வாலாஜாப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கியபீடம் ஆகிய இடங்களில் தன்வந்திரி சந்நிதி உள்ளது. அங்கு சென்று பூஜைகள் செய்யலாம். கடன் நிவர்த்திக்கு திருச்சேறை போகலாம். போட்டி, பொறாமை, எதிரிகளை ஜெயிப்பதற்கு சத்ரு சம்ஹார ஹோமம் செய்யலாம். பொன்னமராவதி அருகில் தேனிமலையிலும், செவலூர் பூமிநாத சுவாமி கோவிலிலும் ஷண்முகார்ச்சனை செய்யலாம். சத்ரு சம்ஹார வேல் பதிகம் பாராயணம் செய்யலாம்.

26-6-2013 முதல் 28-8-2013 வரை முதற்கட்டமாகவும்; 26-1-2014 முதல் 13-4-2014 வரை இரண்டாம் கட்டமாகவும் (வக்ரகதி) திருவாதிரையில் குரு சஞ்சாரம் செய்வார்.

இக்காலம் முதல்கட்டத்தில் வீண் விரயங்களும் வெட்டி அலைச்சல்களும் தவிர்க்க முடியாத பயணங்களும் உண்டாகலாம். சில பேருக்கு கொடுத்த பணம் வராமல் போகலாம். உதவி செய்தும் நன்றி விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாமல் எதிர்மறை விமர்சனங் களைச் சந்திக்கலாம். இரண்டாவது கட்டத்தில் குரு திருவாதிரையில் வக்ரமாக சஞ்சரிக்கும் காலம், அற்புதமான காலமாகவும் நன்மையான காலமாகவும் அமையும். ஒரு ரூபாய் செலவழித்து பத்து ரூபாய் லாபம்  சம்பாதிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். சிதம்பரம் தில்லைக்காளி அம்மனை வழிபட்டால் கெடுதல்கள் நன்மைகளாக மாறும்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை முதற்கட்டமாகவும்; 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாம் கட்டமாகவும் புனர்பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வார்.

புனர்பூசம் குருவின் நட்சத்திரம். குரு விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடையவர். அவர் 8-ல் நின்று 2-ஆம் இடத்தையே பார்க்கிறார். எதிர்பாராத தனலாபம், அதிர்ஷ்டம், யோகம் எல்லாம் உண்டாகும். வாக்குப் பலிதம், சொல்வாக்கு, செல்வாக்கு எல்லாம் கூடும். குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் உண்டாகும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

இக்காலம் எல்லாக் காரியங்களிலும் மந்த நிலையும் ஞாபகமறதியும் முயற்சிகளில் தோல்வியும் ஏமாற்றமும் காணப்படும். தவிர்க்க முடியாத விரயச் செலவுகளும் உண்டாகலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகக் கருதப்படுவதால், அங்கு சென்று வழிபடவும்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

அஸ்தமன காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்களையும் ஏமாற்றங் களையும் இக்காலம் ஈடுகட்டி விடும். வரவேண்டிய பணம் வசூலாகும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் வகையில் சுபச்செலவுகளும் நடக்கும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி செல்வாக்கையும் புகழையும் பெருமையையும் உண்டாக்கும். உங்கள் திறமை வெளிப்படும். அதற்குப் பாராட்டும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும் விரயங்களையும் ஏற்படுத்தினாலும், அது சுபமங்களச் செலவுகளாகவும் சுபவிரயங் களாகவும் இருக்கும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். தாயாதி- பங்காளி உதவிகள் கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி எதிர்பாராத வெற்றிகளையும் லாபத்தையும் தரும். தனலாபம் உண்டாகும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள் சேர்க்கை ஏற்படும்.

துலாம் ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
 இதுவரை 8-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 9-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான் யோகமான இடங்கள். எதிலும் இயற்கையில் சுபகிரகமான குருவுக்கு 5, 9 என்ற திரிகோண ஸ்தானத்தில் 9-ஆம் இடமே மிக ராஜயோகமான இடமாகும். மிதுன குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் ராஜ யோகத்தையும் அடையவிருக்கும் ரிஷப ராசி, சிம்ம ராசி, துலா ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகிய ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். பாபகிரகங்கள் கேந்திரம் பெறுவதும், சுபகிரகங்கள் திரிகோணம் பெறுவதும் நல்லது.

கடந்த காலத்தில் குரு துலா ராசிக்கு 8-ல் இருந்தபோது உங்களுக்கு ஏழரைச் சனியும் நடந்தது. அத்துடன் ஜென்மச் சனி நடந்தபோது சனிக்கு 8-ல் குருவும் சனியும் சஷ்டாஷ்டகமாக இருந்தார்கள். அதனால் மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்பதுபோல, இடிபோல உங்களைப் படுத்திய பாடு இருக்கிறதே, அது ஒரு சோகக் கதை- சொல்ல முடியாத துயரக் கதை.

கடந்த காலத்தில் எல்லா சௌகர்யங்கள் இருந்தும் எதையுமே சாதிக்க முடியாதவர்களாக செயலற்றவர்களாகிப் போனார்கள். சிலர் வட்டி வாசிக்கு கொடுக்க, வாங்கியவர்கள் அரசு சட்டதிட்டத்தால் அசலையும் வட்டியையும் திருப்பித் தராமல் நிமிர்ந்து கொண்டார்கள். பணம் கொடுத்தவர்கள் கேசும் போட முடியாமல், போலீஸ் புகாரும் கொடுக்க முடியாமல், ஆட்களை வைத்து மிரட்டவும் முடியாமல் ஊமை கண்ட கனவு போல மௌனியாக வாயடைத்துப் போனார்கள். கையில் பணவரவு குறைந்தவுடன் வீட்டில் மனைவி, பெற்றோரிடமும் மதிப்பும் மரியாதையும் குறைந்து போனது. "இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்; செல்லாது அவன் வாய்ச் சொல்' என்ற நிலையில், நீங்கள் குடும்பத்தில் ஓரம்கட்டப் பட்டீர்கள். அதிலும் வேலை பார்க்கும் மனைவியாக- சம்பாத்தியம் உடைய மனைவியாக இருந்தால் வேறு கதையே  வேண்டாம். "போடு தோப்புக்கரணம்' என்றால், "எண்ணிக் கொள்' என்ற நிலைதான்.

ஒரு அன்பரின் மனைவி- வேலை பார்க்கும் இடத்தருகில் ஒரு மனை வாங்கிப் போட்டார். அதற்கு பிளான், லோன் எல்லாம் கணவருடைய நண்பரான ஒரு இஞ்சினீயர் மூலமாக ஏற்பாடு செய்து, அவரையே கட்டடமும் கட்டச் சொன்னார்கள். ஆனால் அந்த அம்மாள் எஸ்டிமேட் தொகை அதிகம் என்று தன் தம்பி மூலமாக கட்டடம் கட்ட ஏற்பாடு செய்துவிட்டார். அது வீட்டுக்காரருக்கு வருத்தம். ஏனென்றால் மச்சினருக்கும் அவருக்கும் ஏற்கெனவே பிடிக்காது. வேறு வழியில்லாமல் இஞ்சினீயர் நண்பரை சந்திக்கவே வெட்கப்பட்டு பிரிந்துவிட்டார். இப்படிப்பட்ட அனுபவங்கள் சிலருக்கு.

சிலருக்கு தாறுமாறான வைத்தியச் செலவுகள் வந்தன. பலர் தொழில் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சந்தித்தார்கள். மக்கள் வகையில் மன சஞ்சலப்பட்டவர்களும் உண்டு; அவமானப்பட்டவர் களும் உண்டு. சிலர் சக்திக்கு மீறிய முயற்சிகளில் இறங்கி ஆழம் தெரி யாமல் காலைவிட்டு, நீந்தவும் முடியாமல் கரையேறவும் முடியாமல் கலங்கியவர்களும் உண்டு. ஒரு கமிஷன் தொழில்காரர் சரக்கு கொடுத்த வர்களுக்கு சரியாக பட்டுவாடா செய்யாமல், விற்ற பணத்தையெல்லாம் கோவிலுக்கும் அன்னதானத்துக்கும் சாமி கைங்கர்யத்துக்கும் வாரி யிறைத்து கடனாளியாகிவிட்டார். சரக்கு கொடுத்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து படையெடுத்து பாக்கியை வசூல் செய்ய முற்றுகை யிட்டபோது, ஐ.பி. கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இப்படி கௌரவம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைக் காப்பாற்றப் போராடிய துலா ராசிக்காரர்கள் எல்லாம் இனி அதற்காக நேரத்தையும் நினைவையும் செலவழிக்க அவசியமில்லை. அஷ்டம குரு எந்தெந்த பலனைக் கெடுத்தாரோ அந்தப் பலனையெல்லாம் நற்பலனாக மாற்றி நல்லது செய்வார். மனநிறைவையும் மகிழ்ச்சியையும் 9-ஆம் இடத்து குரு தருவார்.

குரு 8-ஆம் இடத்திலிருந்து 9-ஆம் இடத்துக்கு மாறிவிட்டார் என்றாலும் ஏழரைச் சனி, ஜென்மச் சனி முடியவில்லை. அத்துடன் ஜென்மச் சனியோடு ராகுவும் சேர்ந்துகொண்டதால் கௌரவப் பிரச்சினையும் தன்மானப் பிரச்சினையும் உங்களுக்கு தலைக்குமேல் போன வெள்ளமாகி தத்தளிக்க செய்கிறது. ஜென்மச் சனி ஜென்ம ராகுவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க 9-ஆம் இடத்து குரு உங்களுக்கு உதவுவார். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால், அங்கு நிற்கும் குரு உங்களுக்கு மனோபலத்தையும்- ஆன்ம பலத்தையும் தருவார். தெய்வ நம்பிக்கையால் தெம்பு, திடம், வலிமை உண்டாகும். 9-ஆம் இடத்து குரு பலனாக குருவருளும் திருவருளும் பெருகும் என்பதால் எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றை எளிதாகச் சமாளித்துவிடலாம். "ஒரு மலையை அண்டி வாழவேண்டும் அல்லது ஒரு மனிதனை அண்டி வாழ வேண்டும்' என்று கிராமத்தில் பழமொழி சொல்லுவார்கள். அதன் உள்ளர்த்தம்- உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என்பதுதான். அந்தப் பாதுகாப்புக்கு உத்தர வாதமாக இப்போது 9-ஆம் இடத்து குரு செயல்படுவார்.

9-ல் குரு இருந்தால் குருவருள் தேடிவந்து அருள்பாலிக்கும். எல்லாரும் குருவைத் தேடி உபதேசம் பெறவேண்டும். ஆனால் பூர்வபுண்ணிய வசமாக நல்ல ஞானம் உடையவரை குருவே தேடி வந்து  உபதேசம் செய்வார். இரணியுன் மகன் பிரகலாதன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே நாரதர் அவனுக்கு நாராயண மந்திரத்தை உபதேசம் செய்தார். சைவ சமயக் குரவர்கள் என்போர் நால்வர். சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனப்படுவோர். சந்தானக் குரவர்கள் என்போர் நால்வர். மெய்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் எனப்படுவோர். இதில் மறைஞான சம்பந்தர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது- வெளியே தவழ்ந்து வந்தபோது வானில் பயணித்த கந்தர்வன், "இந்தக் குழந்தை எதிர்காலத்தில் பெரிய ஞானியாக விளங்கும்' என்று கணித்து கீழே இறங்கி வந்து குழந்தையின் காதுகளில் மந்திர உபதேசம் செய்தான். 7 வயதிலேயே மறைஞான சம்பந்தர் இராமலிங்க வள்ளலார் மாதிரி ஞானம் பெற்று சிவஞான போதத்துக்கு விளக்கம் அளித்தார். அருட்பெரும்ஜோதி வள்ளலார் கண்ணாடியில் தன் உருவத்தை வழிபட்டு, வேலும் மயிலும் துணை என்று முருகன் காட்சி கொடுக்க ஞானம் பெற்றார். ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து 17 முறை திருக்கோஷ்டியூர் படையெடுத்து நம்பி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றார். இப்படி குருவைத் தேடி சீடன் போவதும், சீடனைத் தேடி குரு வருவதும் உண்டு. உங்களுக்கு 9-ல் குரு இருப்பதால் குரு உபதேசம் கிடைக்கும்.

ஒருசிலர் குரு உபதேசம் கிடைத்ததும் குருவை மறந்துவிடுவார்கள்; புறக்கணித்துவிடுவார்கள். குருவைத் தேடியலைந்த விவேகானந்தர் இராமகிருஷ்ணரைக் கண்டுபிடித்து உபதேசம் பெற்று குருவுக்கு மரியாதை செய்து உலகமெங்கும் மடங்களை ஸ்தாபித்தார். இதற்கும் குரு பார்வை வேண்டும்.

மிதுன ராசியில் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக ஜென்ம ராசி யையும்; 7-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

ஜென்ம ராசியை பாக்கிய ஸ்தானத்தில் நின்று பார்ப்பதால், இழந்த செல்வாக்கும் பதவியும் கௌரவமும் அந்தஸ்தும் மீண்டும் தேடிவரும். மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள்மீது சுமத்தப்பட்ட வீண் பழியும் களங்கமும் மாறும். உங்களைப் பார்த்து ஏளனமாக எண்ணி எள்ளி  நகையாடியவர்களும் நீங்கள் ஓய்ந்துவிட்டதாகவும் ஒதுங்கி விட்டதாகவும் கருதியவர்களும் ஆச்சரியப்படும் அளவு உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உருவாகும்.

கண்டவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி அசலையும் அடைக்க முடியாமல் வட்டியையும் கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடியவர்களுக்கும் மயங்கித் தயங்கி மறைந்து வாழ்ந்தவர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சியில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். நமக்கும் வாழ்வு உண்டு; எதிர்காலம் உண்டு. பைசா பாக்கியில்லாமல் எல்லா கடன்களையும் அடைத்து நாணயத்தைக் காப்பாற்றி நற்பெயர் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் வரும்- வைராக்கியமும் வளரும்.

என் நண்பர் ஒருவர் சந்தை வியாபாரியாக இருந்தார். மாதச் சீட்டு ஏலச்சீட்டு பிடித்தார். வெளியில் குறைந்த வட்டிக்கு வாங்கி கூடுதல் வட்டிக்கு கொடுத்து வரவு- செலவு நடத்தி வைத்தார். தான் வாங்கிய இடத்தில் டைரியில் தேதி குறிப்பிட்டு அதன்படி தேடிப் போய் வட்டி கொடுத்து வந்தார். எல்லாரும் நாணயஸ்தர் என்று அவரைப் பாராட்டினார்கள். அவருக்கு ஏழரைச் சனியும் சந்திர தசையும் சேர்ந்து நடந்தது. அங்கேதான் விதி வேலை செய்யத் தொடங்கியது. அவரிடம் சீட்டு எடுத்தவர்கள் பெருந்தொகை எடுத்தவர்கள் இவர் மாதிரி ஒழுங்காக தவணை கட்டவில்லை. இரண்டொரு நபர்களும் பணம் கட்டாமல் தலைமறைவாகிவிட்டார்கள். அதனால் நண்பரும் வாங்கிய இடத்தில் பணம் செலுத்த முடியாமல் குடும்பத்தோடு ஒருநாள் போட்டது போட்டபடி தலைமறைவாகிவிட்டார். எங்கே போனார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

3-ஆம் இடம் சகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம். அதற்கு 3, 6-க்குடைய குரு ராசிக்கு 9-ல் நின்று- 3-ஆம் இடத்துக்கு 7-ல் நின்று 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பாவாதிபதி பாவத்தைப் பார்க்க பாவபுஷ்டி. அதனால் நண்பர்களின் சகாயமும் உடன்பிறந்தவர்களின் உதவியும் கிடைக்கும்.. அண்ணன்- தம்பி நான்கு பேர் கூட்டுக்குடும்பம். மூத்தவர் அரிசி வியாபாரி. தன் கடுமையான உழைப்பால் தம்பிகள் எல்லாரையும் ஒவ்வொருவருக்கும் தனித்தொழில், திருமணம் என்று செய்துவைத்தார். ஒரு தம்பி மட்டும் தவறான பாதையில் போய் தொழிலையும் கவனிக்காமல் பல லட்சம் கடனாளியாகிவிட்டார். கடைசியில் அவர் தற்கொலை முடிவுக்குப் போய்விட்டார். மூத்தவரும் அவர் மனைவியும் பெற்றோரும் எல்லாரும் ஒன்றுகூடி பேசி, கடனை அடைத்துவிட்டு அந்தத் தம்பியை தன் தொழிலில் நேரடி பார்வையில் வைத்துக்கொள்ள முடிவு செய்தார். நாலு பேருடைய மனைவியும் அவர்கள் போட்டிருந்த நகைகளைக் கழற்றிக்கொடுத்தார்கள். அதை வைத்து ஒருவர் கட்ட கடனை அடைத்து எல்லாரும் ஒரே தொழிலில் இணைந்து பாடுபட்டார்கள். "முத்துக்கு முத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக; அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக' என்ற பாடலுக்கு அந்தக் குடும்பமே உதாரணமாக அமைந்துவிட்டது.

குரு 5-ஆம் இடத்தைப் பார்த்த பலன் என்ன? 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். திட்டம், மகிழ்ச்சி, தாய்மாமன், பாட்டனார் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும் புத்திர பாக்கியத்துக்காக ஏங்கியவர்களுக்கும் தவம் இருந்தவர்களுக்கும் இனி வாரிசு கிடைக்கும்.

சனி 5-க்குடையவர் என்பதாலும், அவர் ராகு- கேது சம்பந்தம் பெறுவதாலும் ஜாதகரீதியாக புத்திர தோஷம் உள்ளவர்களுக்கு கர்ப்பச்சிதைவு அல்லது ஆபரேஷன் செய்து குழந்தை பெறுவது போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும். அப்படிப்பட்டவர்கள் கருவைக் காப்பாற்ற தஞ்சாவூர் பாபநாசம் அருகில் திருக்கருகாவூர் சென்று, ஸ்ரீகர்ப்பரட்சகாம்பிகையம்மனை வணங்கி, அங்கு விளக்கெண்ணை மந்திரித்து வாங்கி கர்ப்பஸ்திரீ வயிற்றில் தடவிக்கொள்ள வேண்டும். அதேபோல அறுவை சிகிச்சை பிரசவம் ஏற்படாமலீருக்க திருச்சி தாயுமானவ சுவாமிக்கு நேர்த்திக்கடன் செய்துகொள்ளவும். பெண் குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள் ஆண் குழந்தையை விரும்பினால், கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட வேண்டும். திருமணமாகி பல வருடம் குழந்தை இல்லாதவர்கள்கூட சேங்காலிபுரம் சென்று வேண்டிக்கொள்ளலாம். கார்த்திகை மாதம் தத்தஜெயந்தியின்போது தொட்டில் உற்சவத்தில் கலந்துகொள்ளலாம்.

5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். வயதுக்கு வந்த பெண்களுக்கு திருமணம் ஆகாமல் தடைப்பட்டால், பார்வதிகலா சுயம்வர ஹோமம் செய்யலாம். ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமம் செய்யலாம். இதை பள்ளத்தூர் நந்தி ஆஸ்ரமம்- காரைக்குடி நாகநாத சுவாமி கோவில்- வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம், தேவிபட்டினம் மொட்டையர், மகன் சீனிவாச சாஸ்திரி ஆஸ்ரமம் இவற்றில் செய்யலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

துலா ராசிக்கு 2, 7-க்குடையவர் செவ்வாய். அவர் சாரத்தில் குரு சஞ்சரிப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணமாகும்; குடும்பம் அமையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சொல் வாக்கு, செல்வாக்கு ஏற்படும். மனைவி வகையில் எதிர்பாராத சொத்துகள் வரும். பிரிந்திருக்கும் கணவன்- மனைவி ஒன்று சேர்வார்கள்.

26-6-2013 முதல் 28-8-2013 முடிய திருவாதிரையில் முதல் கட்டமாக குரு சஞ்சரிப்பார். திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். ராசிக்கு 12-ல் இருப்பதால் சுபச்செலவுகள் உண்டாகும். நீண்டகாலமாக கும்பிடாமலிருந்த குலதெய்வ வழிபாடு நடக்கும். புண்ணிய ஸ்தல யாத்திரைக்குச் சென்று வருவீர்கள். தெய்வானுகூலம் கிடைக்கும். கௌரவப் பதவிகளும் கிடைக்கும். தாராளமான வரவு- செலவுகளும் இருக்கும். வேலை சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு போகலாம்.

26-1-2014 முதல் 13-4-2014 வரை இரண்டாம் கட்டமாக திருவாதிரை நட்சத்திரத்தில் வக்ரமாக குரு சஞ்சரிப்பார். குரு வக்ரமாக இருக்கும்போது பூர்வீக சொத்து சம்பந்தமாக வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்கள் ஏற்படும். அல்லது தகப்பனாருக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பமோ தொழிலோ தனித்து செயல்படும். பங்காளிகளுடன் பகை ஏற்படும். அதுபோன்ற சந்தர்ப்பங் களில் கும்பகோணமருகில் நாச்சியார் கோவில் சென்று கல்கருடனை வழிபடலாம். அல்லது திருநாகேஸ்வரம் சென்று ராகுவுக்கு ராகுகால பூஜை செய்யலாம்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை புனர்பூச நட்சத்திரத்தில் முதல் கட்டமாக குரு சஞ்சாரம் செய்வார். பிறகு 13-4-2014 முதல் 13-6-2014 வரை மீண்டும் புனர்பூச நட்சத்திரத்தில் இரண்டாவது கட்டமாக குரு சஞ்சாரம் செய்வார். இரண்டு கட்டத்திலும் குரு சுயசாரத்தில் சஞ் சரிப்பதால், எதிர்பாராத உதவியும் சகாயமும் உண்டாகும். புதிய கடன்கள் உருவாகும். பழைய கடன்கள் நிவர்த்தியாகும். சகோதரர்கள் வகையிலும் நண்பர்கள் வகையிலும் நன்மைகளும் உதவிகளும் உண்டாகும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

துலா ராசிக்கு 9-ல் குரு இருக்கிறார். அந்த 9-ஆம் இடமென்பது தகப்பனார், பூர்வ புண்ணிய ஸ்தானம். துலா ராசிக்கு 3, 6-க்குடைய குரு அஸ்தமனமாக இருப்பதால், தகப்பனார் வகையில் அல்லது பங்காளி வகையில் பிரச்சினைகளும் விரயங்களும் உண்டாகலாம். சிலருக்கு கடன் சுமை அதிகமாக இருக்கும். போட்டி, பொறாமை, வைத்தியச் செலவுகளையும் சந்திக்க நேரும். அந்தமாதிரி நேரங்களில் தேவூர் சென்று பிரார்த்தனை செய்துகொள்ளவும். குருவுக்கு பதவி கிடைத்த இடம். குபேரன் வழிபட்ட இடம். மற்ற குரு தலங்களிலும் செய்யலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

இக்காலகட்டத்தில் குரு 9-ல் வக்ரம். வக்ரத்தில் உக்ர பலம். இந்தக் காலம் முழுவதும் உங்களுக்கு மிகச்சிறந்த யோகங்களும் நன்மையும் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சாதகமான தசாபுக்தி நடைபெறுபவர்களுக்கு செல்வாக்கு, புகழ், பாராட்டு, பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுபமங்கள விரயங்கள் நடைபெறும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சியால் செல்வாக்கும் உண்டாகும்; எதிர்ப்பும் போட்டியும் உண்டாகும். அதில் வெற்றியும் உண்டாகும். சிலருக்கு கடன்களும் சிலருக்கு வைத்தியச் செலவும் ஏற்படலாம்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

எதிர்பாராத தனப்ராப்தியும் தன லாபமும் உண்டாகும். பாட்டனார்- பாட்டி வகையில் ஆதாயமும் அனுகூலமும், எதிர் பார்க்கலாம். முஸ்லிம் நண்பர்களுடன் புதிய தொழில் தொடங்கலாம். முஸ்லிம் நாடுகளுக்கு வேலைக்கும் போகலாம்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியால் குடும்பத்தில் ஒற்றுமையும் உடன்பாடும் குதூகலமும் ஏற்படும். இருந்தாலும், காரணமில்லாத கவலைகளும் சஞ்சலங்களும் ஏற்பட இடமுண்டு. சில காரியங்களில் ஏமாற்றமும் தடை தாமதமும் ஏற்பட்டாலும் உங்கள் விடாமுயற்சியால் வெற்றி கொள்ளலாம். திருநெல்வேலி அருகே வள்ளியூர் வழி ராதாபுரம் சென்று, அங்கிருந்து விஜயாபதி சென்று வழிபடவும். விஸ்வாமித்திரர் தவமிருந்த தலம்.

கன்னி ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
 இதுவரை 9-ல் இருந்த குரு இப்போது 10-ல் மிதுனத்துக்கு  மாறியிருக்கிறார். பத்தாம் இடத்துக் குரு பதி குலையச் செய்யும்' என்பது பழமொழி. "ஈசனார் தலையோட்டிலே இரந்துண்டது பத்தில் குரு வந்தபோது' என்பது பாடல்.

அதனால் மிதுன குருப்பெயர்ச்சி பதியைக் குலைக்குமோ? தொழிலைக் கெடுக்குமா? பிச்சை எடுக்க வைக்குமோ என்றெல்லாம் எண்ணிக் கலங்காதீர்கள். நெருப்பு என்று சொன்னால் நாக்கு சுட்டு விடாது. தேன் இனிக்கும் என்று படித்தால் மட்டும் சுவை வராது.

கன்னி ராசிக்கு 4, 7-க்குடைய குரு கேந்திராதிபத்திய தோஷம் அடைவார். கன்னி ராசி உபய ராசி. அதற்கு 7-க்குடையவர் பாதகாதிபதி. எனவே சுபகிரகமாகிய குரு கேந்திரத்தில் இருப்பதும், பாதகாதிபதி ஆவதும் தோஷ நிவர்த்தியாகிறது. இது டபுள் நெகட்டிவ்- ஒரு பாசிட்டிவ் என்பதுபோல! ஆகவே பத்தாம் இடத்து தோஷம் விலகுவதால் பதியைக் குலைக்கும்- தொழிலைக் கெடுக்கும் என்று பயப்படத் தேவையில்லை.

10-ல் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

2-ஆம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். குரு வாக்கு காரகன், தன காரகன் என்பதால், குரு பார்வையால் உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் மேன்மையடையும். தனவரவுக்கும் பஞ்சம் இருக்காது. சரளமான பணப்புழக்கம் காணப்படும்.

ஏற்கெனவே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக கன்னி ராசிக்கு ஏழரைச் சனி நடக்கிறது. பொருளாதார நெருக்கடியையும் பணப்பற்றாக் குறையையும் சந்தித்து, அதைச் சமாளிக்க கந்து வட்டி என்றும் ரன் வட்டி என்றும் மீட்டர் வட்டி என்றும் வாங்கி வாங்கி, யானை வாயில் போன கரும்புபோல, மீளமுடியாமல் தவிக்கிறீர்கள். இந்த குருப் பெயர்ச்சி முதலை உண்ட பாலகனை சுந்தரர் அவிநாசியில் மீட்டுத் தந்ததுபோல, உங்களை கடன் என்ற பேயிடம் இருந்து காப்பாற்றித் தருவார்.

இந்த ஏழரைச் சனியில் பிரிவு, பிளவைச் சந்தித்த கணவன்- மனைவி இனி ஒன்றுசேரும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை இருந்தும் அன்யோன்யம் இருந்தும் வேலை காரணமாக வெளிநாடு போனவர்கள், இனி சிறுமாற்றத்தைச் சந்திக்கக் கூடும். வெளி நாட்டிலேயே அந்த மாற்றம் ஏற்படலாம். அல்லது வெளிநாட்டு வேலை போதும் என்று முடிவெடுத்து உள்ளூரில் வந்து சொந்தத் தொழில் தொடங்கி செட்டில் ஆகிவிடலாம்.

மேற்படிப்பு படிக்க கடந்த ஆண்டுகளில் தடைகளைச் சந்தித்த மாணவர்கள், இனி மேல்படிப்பைத் தொடரலாம். அல்லது விட்டுப் போன "அரியர்ஸ்' சப்ஜெக்டை மீண்டும் எழுதி பாஸ் பண்ணலாம். குறிப்பாக ஆடிட்டிங் படிப்பவர்களுக்கு, இதற்கு முன்பிருந்த தடைகள் விலகிவிடும்.

அடுத்து குரு 4-ஆம் இடத்தை தன் வீட்டையே பார்க்கிறார். அதனால் சொந்த வீடு அல்லது பிளாட் அமையும் யோகமுண்டு. சிலருக்கு வாகன யோகம் அமையும். இந்த ஏழரைச் சனியில் அடிக்கடி வீடு மாறியவர்கள் இனி அசையாமல் நிலையாக குடியமர ஒரு இடம் கிடைத்துவிடும். அது சொந்த வீடாகவும் இருக்கும். அல்லது ஒத்தி வீடாகவும் இருக்கும்.

ஒரு அன்பர் மாடியில் குடியிருந்தார். வீட்டுச் சொந்தக்காரர் கீழே குடியிருந்தார். வீட்டுக்காரர் வேறு புதுபங்களா கட்டி குடிபோய் விட்டார். அப்போது மேலே மாடியில் குடியிருந்தவரை அதே வாடகையில் கீழ் வீட்டுக்குப் பாதுகாப்பாக மாறச்செய்து, மாடிக்கு மட்டும் புதுக்குடியை வைத்துவிட்டார். இதை பதி மாற்றம் என்று சொல்லலாம் அல்லவா!

மிதுன குரு 9-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 6- என்பது கடன், சத்ரு, நோய், வைத்தியச் செலவு ஆகியவற்றைக் குறிக்கும் இடம்.

6-ஆம் இடமான கும்ப ராசிக்கு குரு 2, 11-க்குடையவர். 6-க்கு 5-ல் திரிகோணமாக நின்று 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடன் வளரும்; போட்டி பொறாமை, வைத்தியச் செலவும் வரும்.

குரு 10-ல் நிற்பதால் தொழில் வகைக்காக கடன் வாங்க நேரும். குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகன வகைக்காகவும் கடன் வாங்கலாம். பேங்க் கடன் அல்லது ஹவுசிங் யூனிட் அல்லது தனியார் வகையில் கடன் கிடைக்கும். கடன் வாங்குவதற்கும் ஒரு நியதி இருக்கிறது; முறை இருக்கிறது. கடன் கொடுக்கிறார்கள் என்று எல்லாரிடமும் வாங்கி விடக்கூடாது. தரமானவர்களிடம்தான் கடன் வாங்கவேண்டும். வரவு- செலவு வைத்துக் கொள்ள வேண்டும். ஆத்திர அவசரத்துக்காக வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போடுவதோ நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போடுவதோ தப்பு. அதிலும் கந்து வட்டி, ரன் வட்டி என்று அநியாய வட்டி வசூலிப்பவர்களிடம் போய் மாட்டிக்கொள்ளக்கூடாது.

ஒருவர் கடனை எல்லாம் ஒழுங்காகக் கட்டி முடித்ததும் பத்திரத்தை திரும்ப வாங்கத் தவறிவிட்டார். கடன் வாங்கியவர் இரண்டு மூன்று முறை அலைந்து பார்த்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டார். ஆறுமாதம் கழித்து கடன் கொடுத்தவரிடம் இருந்து வக்கீல் நோட்டீஸ் வருகிறது. வாங்கியவர் கடனைத் திருப்பித் தரவில்லையென்றும், அசலும் வட்டியும் சேர்த்து உடனே கட்டவேண்டும் என்று கேஸ் போட்டு விட்டார். பணம் திருப்பிக் கொடுத்ததற்கு இவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. கோவில் குளம் போய் முறையிட்டார். தெய்வம் சாட்சிக்கு வரும்! எப்போது வரும்? உடனே வருமா? குருக்களைக் கடித்த நாய் நரகத்துக்குப் போகும் என்பது சரிதான் என்றாலும், இப்போது குருக்களுக்குத் தொப்புளைச் சுற்றி பல ஊசி போட வேண்டுமே!

28-5-2013 முதல் 26-6-2013 வரை குரு மிருகசீரிடத்தில் சஞ்சாரம்.

குரு செவ்வாயின் சாரமான மிருகசீரிடத்தில் சஞ்சாரம். செவ்வாய் கன்னி ராசிக்கு 3, 8-க்குடையவர். குரு நின்ற இடத்துக்கும் 6, 11-க் குடையவர் என்பதால், இக்காலம் உங்களுடைய முயற்சிகளில் தளர்ச்சியும் தன்னம்பிக்கைக் குறைவும் உண்டாகும். தன்னம்பிக்கைக் குறைவு என்று சொல்லுவதைவிட தன் பயம் அதிகமாக இருக்கும். எந்த முடிவையும் தீர்க்கமாவும் திட்டமிட்டபடியும் தீர்மானிக்க இயலாத தடுமாற்றம் ஏற்படும். தேவையில்லாத கற்பனை பயமும் கவலையும் ஏற்படும். இக்கால கட்டத்தில் 1-6-2013 முதல் ஒரு மாத காலம் குரு அஸ்தமனம் அடைவார். அப்போது "கெட்டவன் கெட்டிடில் சிட்டிடும் யோகம்' என்பதுபோல, குருவின் அஸ்தமனத்தால் அட்டமாதிபத்திய சாரம் பெற்ற கெடுபலன் மாறி அனுகூலமாக மாறிவிடும். உதாரணத்தோடு சொல்லுவதானால் திருட்டுக் கேஸில் கைதாகிய ஒருவர் அப்ரூவராக மாறி அதிக தண்டனையிலிருந்து தப்புவதுபோல!

26-6-2013 முதல் 28-8-2013 வரை திருவாதிரையில் குரு சஞ்சாரம்.

திருவாதிரை ராகு சாரம். அவர் கன்னி ராசிக்கு 2-ல் குருவுக்கு 5-ல் இருக்கிறார். குருவின் பார்வையையும் பெறுகிறார். எனவே இக்காலம் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும் முடிவில் எல்லாம் நன்மையாக அமையும். கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்களே, அதுமாதிரி! இச்சமயம் யாருக்கும் ஜாமீன் கொடுக் காதீர்கள். வாக்குறுதி வழங்கவேண்டாம். கொடுத்த வாக்கை நிறை வேற்றமுடியாதபடி சோதனை ஏற்படும். உறவினர்களும் நண்பர்களும் உங்களை பஞ்சாயத்துக்கு சாட்சி கூற அழைக்கலாம். மாமியார்- மருமகள் பிரச்சினையில் அல்லது கொடுக்கல்- வாங்கலில் உங்களை சாட்சியாக முன்நிறுத்தலாம். இரண்டுபக்கமும் உங்களுக்கு நெருக்க மானவராக இருக்கும்போது யாருக்காக யாரை பகைத்துக் கொள்வது? நரி வலம் போனால் நல்லதா இடம் போனால் நல்லதா என்பதைவிட, மேலே பாய்ந்து கடிக்காமல் போனால் நல்லது என்று பாலீஷாக நடந்து கொள்வதுதான் நல்லது.

இக்கால சந்தர்ப்பத்தில் குரு வக்ரம் அடைந்து 26-1-2014 முதல் 13-4-2014 முடிய மீண்டும் ராகு சாரத்தில் சஞ்சாரம் செய்வார். வக்ரத்தில் குரு 2-ஆவது முறையாக சஞ்சாரம் செய்யும் காலம் தாராளமான பணப்புழக்கம், குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள், நீண்டகாலமாக பிரிந்திருந்தவர்களின் சந்திப்பு, வருகை ஆகிய பலன் உண்டாகும். ராகு பிரீதியாக வடக்குப்பார்த்த அம்மனை வழிபடலாம். மதுரை மேலமாசி வீதியில், நன்மை தருவார் கோவிலுக்கு தென்புற வீதியில் குபேர பத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் குரு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். அர்ச்சகர் குமார், செல்: 90253 29566. மாதத்தில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி, தமிழ் மாதப்பிறப்பு காலங்களில் மட்டுமே கோவில் திறந்திருக்கும். அந்தக் கோவிலில் ஒரு காலத்தில் நான் ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்த சமயம்தான் "அதிர்ஷ்டம்' பத்திரிகையில் ராசிபலன் எழுதும் வாய்ப்பு வந்தது. மிகவும் சக்திவாய்ந்த அம்மன்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்டமாகவும்; 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாவது கட்டமாகவும் புனர்பூசத்தில் குரு சஞ்சாரம்.

புனர்பூசம் குருவின் நட்சத்திரம். கன்னி ராசிக்கு 4, 7-க்குடைய குரு 10-ல் இருக்கிறார். இடையில் குரு வக்ரமடைந்து திருவாதிரைக்கு மாறி மீண்டும் புனர்பூச நட்சத்திரத்தில் 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டு மாதம் சஞ்சாரம் செய்வார். குருவின் சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமான காலமாகவும் அதிர்ஷ்ட காலமாகவும் இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். பூமி, வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். தாயன்பு பெருகும். தாய்வழி உறவினர் நட்பு வளரும். கல்வியில் மேன்மை, மேற்படிப்பு யோகம், பட்டம் பெறுதல் ஆகிய 4-ஆம் பாவயோகம் உண்டாகும். அத்துடன் திருமணத் தடை விலகும். திருமணம் கூடும். மனைவி அல்லது கணவர் பேரில் சொத்து சுகங்கள் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்பும் ஏற்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நன்மைகளும் உண்டாகும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

ஜனன ஜாதகத்தில் குரு தசையோ குரு புக்தியோ நடந்தால், இக்காலம் எல்லாம் எதிர்மறைப் பலனாக நடக்கும். கன்னி ராசிக்கு 4, 7-க்குடையவர் 10-ல் இருக்கிறார். ஆரோக்கியம் பாதிக்கும். குடியிருப்பில் பிரச்சினை ஏற்படும். அண்டை அயலாருடன் வாக்கு வாதம், வம்புச்சண்டை உருவாகலாம். வேலையில் இருப்போருக்கு டென்ஷன் ஏற்படும். எவ்வளவு ஜாக்கிரதையாக கடமைகளைச் செய்தாலும் செய்யும் வேலையில் ஏதாவது தவறுதல் ஏற்பட்டு மேலிடத்தாரின் திட்டுதல், எச்சரிக்கை, கண்டிப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் சென்னை தாம்பரத்தில் ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடலாம். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் சாத்துக்கூடல் கிராமத்தில் ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்தரசபை 1961-ல் மோகனூர் சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டு, குருபூஜை வழிபாடு நடந்து வருகிறது. அதிலும் கலந்துகொள்ளலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

கன்னி ராசிக்கு 10-ல் உள்ள குரு வக்ரம்பெறும் இக்காலம் தொழில், வேலை, உத்தியோகம், குடும்பம், வாழ்க்கை இவற்றில் திருப்திகரமான பலன்கள் நடைபெறும். சாது, சந்நியாசிகள் சந்திப்பும், குருமார்களின் அனுக்கிரகமும் கிடைக்கும். சிலருக்கு மாதாஜீஅமிர்தானந்தமயி அருளாசி கிடைக்கும். தரிசனம் கிடைக்கும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும் விரயங்களையும் உண்டாக்கும். என்றாலும், சுபச்செலவுகளாக அமையும். வெளிநாட்டுப் பயணம், வெளியூர் வேலைவாய்ப்பு, வெளியூர் வாசம் ஏற்படும்.

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சியால் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறும். பல வருடங்களாக நடைபெற்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். அரசு தரப்பிலிருந்து வரவேண்டிய தொகைகள், பி.எப். போன்றவை கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி சஞ்சலம், ஏமாற்றம், இழப்பு போன்ற பலன்களைத் தந்தாலும், அவற்றைச் சந்தித்து சமாளித்து சாதனை படைக்குமளவு தைரியத்தையும் கொடுக்கும். நண்பர்கள், உடன்பிறப்புகள் உறுதுணையாக தோள் கொடுப்பார்கள்.