Sunday 24 March 2013

மீன ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறுகிறார். "தருமபுத்திரர் நாலிலே வனவாசம் போனது' என்பது பாடல். இதற்கு முன்பு இருந்த 3-ஆம் இடத்துக்கு "தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என்பது பாடல். ஆகவே குருவைப் பொறுத்தவரை 3-ஆம் இடமும் சரி; 4-ஆம் இடமும் சரி- இரண்டு இடங்களுமே சரியில்லாத இடங்கள்தான். அப்படியானால் இந்த குருப்பெயர்ச்சி மீனராசிக்காரர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்யாதா என்ற சந்தேகம் வேண்டாம். குரு உங்கள் ராசிநாதன் என்ற பெருமையால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைக் கெடுக்கமாட்டார்.

அதேசமயம் மீனராசிக்கு 8-ல் சனியும் ராகுவும் இருப்பது குற்றம்தான். அதனால் சில சங்கடங்கள், சஞ்சலங்கள் ஏற்படலாம். என்றாலும் அவர்களை குரு பார்ப்பதால், "குரு பார்க்க கோடி தோஷம் போகும்' என்ற விதிப்படி தோஷ நிவர்த்தியாகும்.

பொதுவாக 4-ஆமிடம் குருவுக்கு மோசமான இடம்தான். குரு இயற்கையில் ஒரு சுபகிரகம். அவர் 4-ல் கேந்திரமாக இருப்பது கேந்திரதோஷம் எனப்படும். அதுமட்டுமல்ல; மீனராசிக்கு 10-க்கு உடையவர். 10-ம் ஒரு கேந்திரம். சுபகிரகமாகிய குரு கேந்திராதிபத்யம் பெறுவது கேந்திராதிபத்திய தோஷம். அதுவும் தவிர, கேந்திராதிபதி மற்றொரு 4-ஆம் இட கேந்திரத்தில் நிற்பது கேந்திர தோஷம்தான்.

ஒருவழிப்பாதையில்  (No Entry) வாகனம் ஓட்டிச்சென்றால் சட்டப் படி குற்றம்- தண்டனை உண்டு. ஆனால் அவசர நிமித்தம் உயிருக்கு மன்றாடும் ஒரு நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேன் போனாலும் அல்லது தீயணைக்கும் வாகனம் போனாலும் அது சட்டப் பிரச்சினை ஆகாது. அதேபோல ஒரு குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் வேன் விரட்டிப்போனாலும் குற்றமாகாது. அது விதிவிலக்கு! அதேபோல ராசிநாதன் அல்லது லக்னநாதனுக்கு எந்த தோஷமும் கிடையாது. விதி விலக்கு  உண்டு. அவர்கள் நின்ற இடம் மேன்மை யடையும்; பாதிக்காது. ராமன் சென்ற இடம் அல்லது ராமன் நின்ற இடம் அயோத்தி என்று சொல்லுவதுபோல! ஆகவே 4-ல் ராசிநாதன் குரு இருப்பதால்- 4-ஆமிடத்து தோஷம் பாதிக்காது என்பதால், அந்த பயத்தை விலக்கி தைரியம் அடையலாம்.

ஆனால் மீனராசிக்கு 2-ல் கேது நிற்பதும், 8-ல் சனியும் ராகுவும் நிற்பதும் தோஷம்தான்; குற்றம்தான். 2-ல் உள்ள கேது மீனராசிக்கு 12-ஆம் இடம், 8-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 8-ல் உள்ள ராகு மீனராசிக்கு 6-ஆம் இடம், 2-ஆம் இடம், 10-ஆம் இடங் களைப் பார்க்கிறார். ராகுவும் கேதுவும் தான் நின்ற இடத்திலிருந்து 3, 7, 11-ஆம் பார்வை பார்க்கும். அதே போல 8-ல் உள்ள சனி 10-ஆம் இடம், 2-ஆம் இடம், 5-ஆம் இடங்களைப் பார்க்கிறார். சனிக்கு 3, 7, 10-ஆம் பார்வை உண்டு. (ராகு- கேது எதிர்மறைப் பார்வை (ஆய்ற்ண் ஈப்ர்ஸ்ரீந்) பார்க்கும்).

இதில் குருவின் பார்வை மீனராசிக்கு 8, 11, 12-ஆம் இடங்களுக்கு கிடைப்பதால் மேற்கண்ட கேது, சனி, ராகு பார்க்கும் இடங்களான 10, 12-ஆம் இடங்களுக்கான தோஷம் விலகிவிடும். குரு 4-ல் இருப்ப தால், 4-ஆம் இடத்தை கேது பார்க்கும் தோஷமும் விதிவிலக்காகும். அதனால் 2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம்; 5-ஆம் இடம் புத்திரஸ்தானம், மனது, திட்டம், மகிழ்ச்சி போன்றவற்றில் மட்டும் மீனராசிக்காரர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம்.

ஒரு கெட்டவனோடு ஒரு நல்லவன் சேர்ந்தால்- அந்த நல்லவன் சபலம் உடையவனாகவும் சலனம் உள்ளவனாகவும் உறுதி யற்றவனாகவும் இருந்தால் நல்லவனும் கெட்டவனாக மாறிவிடுவான். லஞ்சம் வாங்கும் பல ஊழியர்களோடு வேலை பார்க்கும் ஒருவன் மட்டும் நேர்மையாக வாழமுடியாது. அவனையும் மற்றவர்கள் மாற்றிவிடுவார்கள். அல்லது அவனை எதிலாவது மாட்டி விடுவர்கள். லஞ்சம் வாங்காமல் கெட்டபெயர் எடுப்பதை விட, லஞ்சம் வாங்கியே கெட்ட பெயர் எடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விடுவான். இதுதான் சகவாச தோஷம்.

ஒரு குடிகாரகன் தன்னுடன் சேர்ந்த நல்லவனையும் குடிக்கவைத்து விடுவான். இங்கு மூன்று விதமான பலன் நடக்கலாம். ஒன்று, அந்த நல்லவன் குடிகாரனைத் திருத்தலாம். அல்லது நல்லவனும் கெட்டுப் போய் அவனோடு சேர்ந்து குடிக்கலாம். முடியாத பட்சத்தில் எக்கேடோ கெட்டுப்போய் தொலையட்டும் என்று, குடிகாரனைவிட்டு நல்லவன் ஒதுங்கி விடலாம்.

இந்த உதாரணக் கணக்குப்படி குரு நல்லவர் என்பதோடு ராசிநாதன் என்ற தன்மையால், ராகு, கேது, சனியும் நல்லவர்களாகி விடுவார்கள். அவர்கள் பார்க்கும் இடங்களையும் கெடுக்காமல் விட்டு விடுவார்கள்.

குரு 4-ல் நிற்கிறார். 4-ஆம் இடம் தாய், தன் சுகம், கல்வி, வீடு, வாகனம், பூமி ஆகிய அம்சங்களைக் குறிக்கும். ராசிநாதனே அங்கு இருப்பதால் இவை யாவும் அனுகூலப் பலன்களாக நடக்கும். மேற் படிப்பு யோகம், பாடத்தில் அரியர்ஸ் இருந்தால் அவற்றை எழுதி பாஸ் செய்வது, அட்டமத்துச் சனி நடப்பதால் வெளிநாடு போய் படிக்கும் யோகம், பிளாட் வாங்குவது, கட்டடம் கட்டுவது, புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வது போன்ற பலன்கள் உண்டாகும். அட்டமத்துச் சனி தொடங்கி ஓராண்டுக்குமேல் ஆகிறது. கடந்த ஓராண்டாக உடல் நலக் குறைவு, தேவையற்ற வைத்தியச் செலவு, ஆஸ்பத்திரி அலைச்சல் என்று அவதிப்பட்டவர்களுக்கு இனி மாறுதலும் ஆறுதலும் உண்டாகும். முழு அளவில் ஆரோக்கியம் ஏற்படும். உங்களுக்கோ குடும்பத்தினருக்கோ இனி சுகம் உண்டாகும். அதேபோல தாயாருக்கு முழங்கால் வலி, மூட்டுவலி, கழுத்து வலி அல்லது நரம்புத் தளர்ச்சியால் அவதிப்பட்ட நிலை மாறிவிடும். சிலருக்கு டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகம் உண்டாகும். வங்கிக் கடன் வாங்கி புதிய வாகனம் வாங்கலாம். சிலர் பழைய காரை கொடுத்து புதிய கார் வாங்கலாம். சிலர் ஏற்கெனவே சிறிய கார் இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் பயணம் போகும்படி சுமோ, ஸ்கார்ப்பியோ, இன்னொவா போன்ற பெரிய கார்கள் வாங்கலாம். ஒரு சிலர் தொழில் அடிப்படையில் "டி-ஃபோர்டு' வாகனம் வாங்கி பிசினஸ் செய்யலாம்.

கடந்த காலத்தில் சனி கன்னியில் இருந்தபோது 4-ஆம் இடத்தைப் பார்த்ததால், 4-க்கு 6-ல் ராகுவும் இருந்ததால், தாய்க்கும் உங்களுக்கும் ஆகாத காலமாக இருந்தது. என்னதான் தாய் தெய்வத்துக்கு சமமானவர் என்றாலும், உங்கள் கிரக அமைப்புப்படி தாயே உங்களுக்கு வேண்டாதவராக மாறியதும் உண்டு. நீங்கள் எவ்வளவு பந்த பாசத் தோடு தாயைப் பரிபாலனம் செய்தாலும், அந்த அம்மாளுக்கு உங்கள்மேல் மனத் திருப்தியும் மன நிறைவும் ஏற்பட்டிருக்காது. மகள் மீதுதான் அளவு கடந்த பாசமாகி நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுப்பார்.  அல்லது ரகசியமாக சேர்த்து வைத்த சிறுவாடு சேமிப்பு களையெல்லாம் உங்கள் கஷ்டத்துக்குக்கூட கொடுத்து உதவாமல் மகளுக்கே கொடுத்திருக்கலாம். அல்லது மூத்த மகனுக்கு கொடுத்திருக்க லாம். அதாவது நீங்கள் வளர்க்கும் கோழி- அடுத்த வீட்டில் போய் முட்டையிட்டு வந்துவிடும்.

இந்த குருபெயர்ச்சிக்குப் பிறகு அந்தநிலை மாறிவிடும். இருக்கும்வரை பிடுங்கிக்கொண்ட மகள் எதுவும் இல்லையென்றதும் தாயைக் கழற்றிவிடவும், தாய்க்கு இனிமேல்தான் மகன்மேல் பாசம் திரும்பும். நீங்களும் தாயின் நடவடிக்கையை எண்ணி ஆத்திரப் படாமல்- வெறுப்பு அடையாமல் அம்மாவை அரவணைத்து ஆதரவு காட்டவேண்டியது உங்கள் கடமை. யாராக இருந்தாலும் ஒரு மகனானவன் குடியிருந்த கோவிலை இடிக்கக்கூடாது. இறுதிக் கடமைகளை செய்யாமல் ஒதுக்கக்கூடாது. தந்தைக்கு  ஈமக்கடன் செய்யாவிட்டாலும் தோஷமில்லை. பெற்ற தாய்க்கு கண்டிப்பாக கருமக் கிரியை செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் மூன்று தலைமுறைக்கு அந்தப்பாவம் வாரிசுகளையும் தாக்கும். பட்டினத் தாரும் ஆதிசங்கரரும் துறவு பூண்டாலும்கூட, தாயின் அந்திமக் காலத்தில் தேடிவந்து, குடியிருந்த கோவிலுக்கு செய்யவேண்டிய கர்மாவைச் செய்து புண்ணியம் தேடினார்கள்.

இப்போது மிதுனராசிக்கு வந்துள்ள குரு 5-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதில் 8-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் பார்ப்பது நன்மையில்லை. ஆனால் 10-ஆம் இடத்தை 10-க்குடையவரே பார்ப்பது மிகமிகச் சிறப்பு- நன்மையே!

தொழில் துறையில் போட்டி, பொறாமைகள் குறுக்கிட்டாலும், கூட இருந்தே குழிபறிக்கும் நம்பிக்கை துரோகிகள் இருந்தாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது; பங்கமும் வராது; குறையும் வராது! "கெடுவார் கேடு நினைப்பார்' என்ற விதிப்படி உங்களைக் கெடுக்க நினைக்கிறவர்கள் கெட்டுப்போய் விடுவார்கள். அதனால் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள்; முன்னேறுவீர்கள். உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, உங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த உங்கள் உதவியாளர்கள், காலப்போக்கில் தகுதி யில்லாதவர்கள் என்று வெளியேற்றப் படுவார்கள். அதன்பிறகுதான் உங்கள் மேலிடத்தில் உங்களுக்கு செல்வாக்கு உண்டாகும். அசல் எது- போலி எது என்று தெரிவதற்கும் நேரம் காலம் தேவைப்படும். வீதியில் தொலைத்துவிட்ட பணப்பையை யாரோ ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டால், உடனே போய் வாங்கிவிட முடியாது. நீங்கள் தான் பைக்கு உரிமையானவர் என்பதை ஆதாரத்தோடு நிரூபித்த பிறகு தான் பெற்றுக் கொள்ள இயலும்.

8, 12-ஆம் இடங்களை குரு பார்ப்பதால், குடும்பத்தில் அர்த்த மில்லாத பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். மற்றவர்கள் உங்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், உங்கள் மனம் ஆணையிடுவதுபோல செயல்படுங்கள். "போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றுவேன்; எவர் வரினும் எதிர் வரினும் நில்லேன் அஞ்சேன்' என்று கவியரசு கண்ணதாசன் கூறியபடி உங்கள் போக்கில் போய்க்கொண்டே இருப்பீர்கள்.

சிலருக்கு ஊர்மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். மீனராசிக்கு அட்டமச்சனி நடக்கும்போது, குடும்பத்தில் இருவருக்கு ராகு அல்லது கேது தசையோ புக்தியோ நடந்தால்- தாய், தந்தை, குழந்தை என்று சேர்ந்துவாழ முடியாது. யாராவது ஒருவர் வெளிநாடு போகும் யோகம் உண்டாகும். 2014- டிசம்பர் வரை தற்காலிகப் பிரிவாக வெளியூர் அல்லது வெளிநாட்டு வாசம் ஏற்படலாம். அது உத்தியோகப் பிரிவாகவும் அமையலாம். சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால், அந்தப் பிரிவு  வருத்தமான பிரிவாகவும் இருக்கலாம். அப்படியிருந் தாலோ ராகு- கேது தசாபுக்தி நடந்தாலோ சூலினி துர்க்கா ஹோமம் செய்துகொள்ள வேண்டும். சந்திர தசாபுக்தி நடந்தால் ருத்ர ஹோமம் செய்து சிவலிங்கத்துக்கும் அம்பாளுக்கும் திங்கள்கிழமை ருத்ர ஹோமம் செய்ய வேண்டும். அத்துடன் திங்கள்கிழமை தோறும் தொடர்ந்து சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். சிவகங்கையில் சந்திரன் சாபவிமோசனம் பெற்ற சசி வர்ணேசுவரர் கோவில் சென்று வழிபடலாம். கும்பகோணம் அருகில் திங்களூர் சென்றும் சிவனுக்கு அபிஷேகம், பூஜைசெய்யலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம் செய்வார். செவ்வாய் மீனராசிக்கு 2, 9-க்குடையவர். குரு 1, 10-க்குடையவர். 9-க்குடையவர் சாரத்தில் 10-க்குடையவர் சஞ்சரிப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே எல்லா வகையிலும் உங்களுக்கு யோகமான காலமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தனவரவு, வரவேண்டிய பாக்கிசாக்கி வசூல் ஆவது. குறிப்பாக அரசு தரப்பிலிருந்து வரவேண்டிய பணம் வந்து சேருவது போன்ற அனுகூலம், ஆதாயம், லாபம் உண்டாகும். பாக்கியம் பெருகும். குடும்பத்துக்கு தேவைப்பட்ட ஆடம்பரப்பொருள் சேர்க்கையும், அத்தியாவசியமான பொருள் சேர்க்கையும் உண்டாகும். உங்கள் மனதை ஈர்க்கும் சித்தரின் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவும்.

திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். அதில் 26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாகவும்; பிறகு 26-1-2014 முதல் 13-4-2014 வரை வக்ரகதியாக இரண்டாவது கட்டமாகவும் குரு சஞ்சாரம் செய்வார். ராகு மீனராசிக்கு 8-ல் இருப்பதால், முதல் கட்டத்தில் குரு பார்வையால் நல்ல மாற்றங்களாக நடக்கும். வீடு, வேலை, உத்தியோகம் இவற்றில் விரும்பிய மாற்றமும் இடப்பெயர்ச்சியும் உண்டாகும். தகப்பனார் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகையில் லாப விரயம் அல்லது பரிவர்த்தனை யோகம் அமையும். அட்டமச்சனியோடு ராகு சம்பந்தம் என்பதால், நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தகிரி முருகன் கோவிலில் வழிபாடு செய்யலாம். சேந்தமங்கலம் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன், செல் 93454 38950-ல் தொடர்பு கொள்ளலாம். திண்டிவனம் அருகில் திருவக்கரை சென்று வழிபடலாம். முடிந்தால் அபிஷேக பூஜை செய்யலாம்.

இரண்டாவது கட்டத்தில் (வக்ரகதியில்) தேவையற்ற மனக்குழப்பம், குடும்பத்தில் அமைதிக்குறைவு, உடல்நலத் தொந்தரவு, தவிர்க்க முடியாத வைத்தியச் செலவு, முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம், தடை, தாமதம் ஆகிய பலன்களை சந்திக்கக் கூடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சூலினிதுர்கா ஹோமம் செய்யலாம். மாயவரம்- பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று, பிராகாரத்தில் உள்ள 12 நாகர் சிலை களுக்கு பாலாபிஷேகம் செய்யலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ராகு- கேது சிலை இருக்கிறது. அதற்கு அபிஷேக பூஜை செய்யலாம். கோவை மருதமலை சென்று பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதியை வழிபடலாம்.

புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம். இதிலும் குரு இரண்டு கட்டமாக சஞ்சரிப்பார். 28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்ட மாகவும்; பிறகு 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாவது கட்ட மாகவும் குரு சஞ்சாரம் செய்வார். இந்த இரண்டு கட்டத்திலும் குரு உங்களுக்குப் பரிபூரணமான யோகத்தையும் நன்மைகளையும் தருவார். பாரம்பரிமான பேரும் புகழும் உண்டாகும். கௌரவப் பட்டம், பாராட்டு, மரியாதை, அந்தஸ்து உண்டாகும். எல்லோரும் உங்களை வணங்கத்தக்க அளவு உயர்வும் பெருமையும் ஏற்படும். புதிய தொழில் யோகம், குடும்ப வாழ்க்கையில் மேன்மை, அளப்பரிய சாதனை, குடும்பத்தாரின் அன்பு, ஆதரவு, ஒத்துழைப்பு, ஆனந்தம் உண்டாகும். தேக சுகத்தில் தெளிவும் முன்னேற்றமும் ஏற்படும். வாகன யோகம் உண்டாகும். கட்டட சீர்திருத்தம், புதிய வீடு, மனை யோகம் ஏற்படும். சிலர் கடல்கடந்து போய்வரும் யோகமும் அமையும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

ராசிநாதனும் 10-க்குடையவருமான குரு 4-ல் அஸ்தமனம் என்பதால் கௌரவப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்.  தொழில் துறையிலும் அல்லது உத்தியோகத்திலும் போட்டி, பொறாமை, பிரச்சினைகள், எதிர்ப்பு, இடையூறுகளை சந்திக்க நேரும். சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சிலருக்கு குடியிருப்பு மாற்றங்களும் வரும். வாகனம் சம்பந்தமான பராமரிப்பு செலவுகளும் ஏற்படலாம். ஒருசிலருக்கு சிறு விபத்துகள் நேரலாம். அப்படிப்பட்டவர்கள் சென்னையை அடுத்துள்ள பாடி (திருவலிதாயம்) சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும். சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தில் திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்டோர் தரிசித்து பாடியுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து செல்லலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

வக்ரத்தில் உக்ரபலம் என்பதால், இக்காலம் முழுவதும் உங்களுக்கு யோகமான காலம்; நன்மையான காலம். பட்டம், பதவி, பாராட்டு கிடைக்கும். தொழில் உயர்வு, சம்பாத்திய மேன்மை உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் நிறைவு, நிம்மதி ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் உண்டாகும். வாகன யோகம் அமையும். புதிய வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம். மாணவர்களுக்கு மேற்படிப்பு யோகம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி அற்புத யோகங்களையும் நற்பலன்களையும் தரக்கூடும். எதிர்பார்த்த காரியங்களில் இனிய வெற்றியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். குருவின் நட்சத்திரம் பூரட்டாதி என்பதால், செல்வாக்கும் பெருமையும் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும். பிள்ளைகள் வகையில் திருமணம், வாரிசு, உத்தியோக உயர்வு, சம்பாத்தியம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம். சனி 8-ல் இருந்தாலும் குரு பார்ப்பதால்- குடியிருப்பு மாற்றம் அல்லது சீர்திருத்தம் அல்லது கட்டட விருத்தி ஏற்படும். உபதொழில் யோகம் அமையும். தனப் பெருக்கம் உண்டாகும். வயதானவர்களுக்கு பேரன் பேத்தி யோகம்- இளம் வயதினருக்கு திருமண யோகம் கூடும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:

ரேவதி புதன் நட்சத்திரம். புதன் 4, 7-க்குடையவர். புதன் வீட்டில்தான் குரு அமர்ந்துள்ளார். இந்த குருப்பெயர்ச்சியால் தேக ஆரோக்கியத்தில் தெளிவு, முன்னேற்றம் உண்டாகும். திருமணம், புத்திர பாக்கியம், பூமி, மனை, வீடு யோகம், சொந்தவீடு கனவு நனவாகுதல் போன்ற மங்கள நிகழ்வுகள் உண்டாகும்.

No comments:

Post a Comment