Friday 22 February 2013

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்கா அரசின் 3 பாலியல் துன்புறுத்தல்கள்


சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் குறித்து திங்களன்று வெளிவரவுள்ள அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. 

சாட்சியம் 01

2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பிலுள்ள தனது வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிடித்துச் செல்லப்பட்ட 31 வயதான தமிழ்ப்பெண்,
“கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு பணியகத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன்.
எனக்கு குடிக்க நீரோ, உணவோ தரப்படவில்லை.
அடுத்த நாள், சீருடை அணிந்த ஒரு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் என்னைப் படம் பிடித்தனர்.
எனது கைவிரல் அடையாளங்களை பதிவுசெய்தனர். வெற்றுத்தாளில் எனது கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டனர்.
எனது கணவர் பற்றிய எல்லா விபரங்களையும் தாம் வைத்துள்ளதாகவும், அவர் எங்கே பதுங்கியுள்ளார் என்ற விபரத்தை கூறிவிடுமாறும் அவர்கள் என்னிடம் கேட்டனர்.
எனது கணவர் வெளிநாடு சென்று விட்டதாக அவர்களுக்கு கூறினேன்.
அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக, அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.
பல்வேறு பொருட்களால் நான் தாக்கப்பட்டேன். விசாரணையின்போது, வெண்சுருட்டினால் சுடப்பட்டேன்.
மணல் நிரப்பிய குழாயினால் தாக்கப்பட்டேன். அடித்துக் கொண்டே எனது கணவர் பற்றிய விபரங்களை கேட்டனர்.
ஒரு இரவில் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன்.
சாதாரண உடையில் இரண்டுபேர் எனது அறைக்குள் வந்தனர். எனது ஆடைகளை அவிழ்த்து விட்டு இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்.
அவர்கள் சிங்களத்தில் பேசினர். வேறு எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அது இருளாக இருந்ததால், அவர்களின் முகங்களை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.” என்று விவரிக்கிறார்.


சாட்சியம் 02
2012 ஓகஸ்ட் மாதம் பிடிக்கப்பட்ட இன்னொரு 23வயது இளைஞர். “அவர்கள் எனது கண் கட்டை அவிழ்த்து விட்டபோது, நான் ஒரு அறைக்குள் இருப்பதை கண்டேன். அங்கு மேலும் நால்வர் இருந்தனர்.
 நாற்காலி ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டேன்.
அண்மையில் வெளிநாடு சென்றதற்கான காரணம் என்ன என்று கேட்டனர்.என்னைக் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கினர்.
மின் வயரினால் அடித்தனர். வெண்சுருட்டினால் சுட்டனர். பெற்றோல் நிரப்பிய பொலித்தீன் பைக்குள் அமுக்கினர்.
பின்னர் அன்றிரவு, நான் சிறிய அறை ஒன்றுக்குள் கொண்டு செல்லப்பட்டேன். தொடர்ந்து மூன்று நாட்களாக நான் பாலியல் ரீதியாதத் துன்புறுத்தப்பட்டேன்.
முதல் நாள் இரவு ஒருவர் தனியாக வந்து வல்லுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் இரண்டு ஆண்கள் எனது அறைக்கு வந்தனர்.
அவர்கள் என்னை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியதுடன் வாய் வழி உறவு வைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்தித்தனர்.
பாலியல் வல்லுறவுகளை அடுத்து எனக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறும் ஆவணத்தில் நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.”

 
சாட்சியம் 03
2009 மே மாதம் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மற்றொரு இளைஞர்.
“இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்புறம் பிடித்திருக்க, ஒருவர் எனது ஆணுறுப்பைப் பிடித்து அதனுள் உலோகத்துண்டு ஒன்றை செலுத்தினார்.
எனது ஆணுறுப்பினுள் அவர்கள் சிறிய உலோகக் குண்டுகளை செலுத்தினர்.
சிறிலங்காவில் இருந்து நான் தப்பி வந்த பின்னர் அவை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.”
இதற்கு ஆதாரமான மருத்துவ அறிக்கையும் உள்ளது. என்று விவரிக்கிறார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாட்சிகளே இவை.
இதுபோன்ற சித்திரவதைகள், பாலியல் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் பலரும் தமக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக ஒப்புக்கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு சாட்சியமளித்துள்ளவர்கள் எவரும் முறைப்படியாக விடுதலை யாகவில்லை.
அதிகாரிகளுக்கு உறவினர்கள் இலஞ்சம் கொடுத்தத்தை அடுத்து தப்பிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment